Tuesday 5 May 2020

*பாஞ்சாலியின் பாத அணிகளை கண்ணன் சுமந்தது ஏன்?*

*பாஞ்சாலியின் பாத அணிகளை கண்ணன் சுமந்தது ஏன்?*

குருக்ஷேத்திரத்தில் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையிலான யுத்தத்தில் ஒன்பது நாள்கள் முடிந்து விட்டன.

 'ஒன்பது நாள்கள் கடந்தும் பாண்டவர்களை வீழ்த்த முடியவில்லையே!' என்று நினைத்த துரியோதனன், மகாரதராக இருந்த பீஷ்மரிடம் தான் கொண்டிருந்த நம்பிக்கையை இழந்து விட்டான்.

'தாத்தா பீஷ்மர், பாண்டவர்களை ஒழிக்க வேண்டும் என்ற உறுதியுடன் போரிடவில்லை' என்றே நினைத்தான்.
தன் எண்ணத்தை மிகக் கோபத்துடன் பீஷ்மரிடமும் தெரிவித்தான்.
துரியோதனின் கடுமையைக் கண்ட பீஷ்மரும், அதே கடுமையுடன் மறுநாள் போரில் பாண்டவர்களை அடியோடு வீழ்த்துவதாக சபதம் செய்தார்.
ஆனால், துரியோதனனோ, '`பாண்டவர்களை வீழ்த்துவேன் என்று சொல்லாதீர்கள். `அவர்களைப் போரில் கொல்வேன்'' என்று சொல்லுங்கள்' என்றான்.
செஞ்சோற்றுக் கடனைத் தீர்க்க வேண்டுமே என்பதற்காக பீஷ்மரும், `"அப்படியே ஆகட்டும்'' என்று கூறிவிட்டார்.
அதே தருணத்தில் பாண்டவர்களின் பாசறையில் இருந்த கண்ணன் லேசாகச் சிரித்தான்.
அவனுடைய சிரிப்பின் காரணம் அங்கிருந்த பாண்டவர்களுக்குப் புரியவில்லை.
சற்றைக்கெல்லாம், பீஷ்மர் செய்த சபதம் பாண்டவர்களுக்குத் தெரியவந்தது.
அர்ஜுனன் உட்பட அனைவருக்கும் கலக்கம் ஏற்பட்டு விட்டது.
பிதாமகர் பீஷ்மர் எவராலும் வெற்றி கொள்ள முடியாதவர் ஆயிற்றே. நன்றிக் கடனுக்காக அவர் துரியோதனன் பக்கம் இருந்தாலும், தர்மம் வெல்லும் என்று நமக்கு ஆசி கூறியவர் ஆயிற்றே. அவரே இப்போது நம்மை ஒழிப்பதாக சபதம் செய்திருப்பதால், நிலைமை நமக்கு பாதகமாகத்தானே இருக்கும் என்று நடுங்கினார்கள்.
பாண்டவர்களின் இந்தச் சோர்வையும் கலக்கத்தையும் கண்ட பாஞ்சாலி, மிகவும் கவலை கொண்டாள்.
இனி தன்னுடைய சபதம் என்னாவது? போரின் திசையே மாறிவிடும் போலிருக்கிறதே. இந்தக் கண்ணன் என்ன ஆனார். அவருக்கு இதெல்லாம் தெரியுமா இப்படியெல்லாம் பாஞ்சாலி நினைத்துக் கொண்டிருந்தபோதே, கண்ணன் அங்கே வந்து சேர்ந்தான்.
பாஞ்சாலியைப் பார்த்து, ``சத்தம் செய்யாமல் என் பின்னால் வா’’ என்று மிக மெல்லிய குரலில் கூறி, அந்த நள்ளிரவில் அவளை எங்கேயோ அழைத்துச் சென்றான். போர்க்களத்தினூடே கண்ணன் நடந்து சென்றுகொண்டிந்தான்.
ரணகளமாக மாறியிருந்த யுத்த பூமியில் மரண அவஸ்தையில் வீரர்கள் எழுப்பிய அவலக் குரல்களின் ஒலி, அந்தப் பிரதேசத்தையே அமானுஷ்யமாக மாற்றியிருந்தது.
ஆனாலும், கண்ணன் உடனிருக்கிறான் என்ற தைரியத்தில் பாஞ்சாலிக்குச் சிறிதும் அச்சம் ஏற்படவில்லை. எதையும் பொருட்படுத்தாமல் கண்ணனின் பின்னால் தொடர்ந்து சென்று கொண்டிருந்தாள்.
யுத்தகளத்தை விட்டுச் சற்று விலகியதும் மற்றொரு சத்தம் கேட்டது.
அரசகுலத்தில் பிறந்தவள் ஆதலால், பாஞ்சாலி அணிந்திருந்த விலையுயர்ந்த காலணிகள் எழுப்பிய ஓசைதான் அது.
திடீரென்று ஓரிடத்தில் நின்ற கண்ணன், பாஞ்சாலியைப் பார்த்து, ``சகோதரி, உன் காலணிகள் மிகவும் சத்தம் எழுப்புகின்றன. அவற்றைக் கழற்றிப் போடு’’ என்று கூறினான்.
பாஞ்சாலியும் அப்படியே காலணிகளைக் கழற்றி வீசினாள்.
பின்னர், தொலைவிலிருந்த ஒரு கூடாரத்தைச் சுட்டிக் காட்டிய கண்ணன், ``பாஞ்சாலி, நீ எவரும் அறியாமல் அந்தக் கூடாரத்துக்குச் செல். உள்ளே குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருக்கும் மனிதரின் காலில் விழு. மற்றபடி ஏன், எதற்கு என்றெல்லாம் கேட்காதே’’ என்றான்.
பாஞ்சாலியும் கண்ணன் சொன்னபடியே கூடாரத்துக்குள் சத்தம் செய்யாமல் நுழைந்தாள்.
அங்கே ஒரு மனிதர் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார். அவர் திரும்பிப் பார்ப்பதற்குள் அவருடைய காலில் விழவேண்டும் என்ற வேகத்துடன் அவருடைய கால்களில் விழுந்தாள் பாஞ்சாலி.
யாரோ ஒரு பெண் தன் காலில் விழுவதைக் கண்ட பீஷ்மர், ``தீர்க்கசுமங்கலியாக இரு பெண்ணே’’ என்று வாழ்த்தினார்.
பின்னர் அவளை எழுந்திருக்கச் சொன்னதுடன், அவள் யாரென்றும் கேட்டார்.
பாஞ்சாலி எழுந்தாள். அவளைப் பார்த்ததுமே பீஷ்மர் திடுக்கிட்டார். `போயும் போயும் இவளையா வாழ்த்தினோம்?' என்று தனக்குள் மருகினார்.
நாளைய போரில் யாரை ஒழித்துக்கட்டப் போவதாக துரியோதனனுக்கு வாக்களித்திருந்தாரோ, அந்தப் பாண்டவர்களின் பத்தினியை, `தீர்க்கச் சுமங்கலியாக இரு' என்றல்லவா வாழ்த்தி விட்டார். தெய்வம் தன்னை மிகவும் சோதிப்பதாக எண்ணி வருந்தினார் பீஷ்மர்.
பாஞ்சாலியைப் பார்த்த பீஷ்மர், ``அம்மா பாஞ்சாலி, பிணங்கள் குவிந்திருக்கும் இந்த யுத்தக் களத்தினூடே நீ தனித்தா வந்தாய்? உன்னை யார் இங்கே அழைத்து வந்தார்கள்?’’ என்று கேட்டார்.
அப்போது கூடாரத்தின் வாயிலில் ஏதோ நிழல் அசைவதுபோல் தெரிந்தது.
அங்கே கண்ணன் நின்று கொண்டிருந்தான். பீஷ்மருக்கு என்ன நடந்திருக்கும் என்பது புரிந்துவிட்டது.
``வா கண்ணா, வா. இது உன் வேலையாகத்தான் இருக்கும் என்று நான் நினைத்தேன். இது என்ன கையில் ஏதோ துணிமுடிச்சு?’’ என்று கேட்டார்.
``ஓ, இதுவா? பாஞ்சாலியின் பாதணிகள்தாம் இவை. அதிக ஓசை எழுப்பவே கழற்றச் சொன்னேன். அதைத்தான் என் உத்தரியத்தில் முடிந்து வைத்திருக்கிறேன்’’ என்றான்.
கண்ணன் சொன்னதுதான் தாமதம். திரௌபதி பாய்ந்து சென்று அதைப் பிடுங்கினாள். ``கண்ணா! இது என்ன சோதனை. என் காலணிகளை நீ சுமப்பதா? என்னை மகாபாவியாக்க வேண்டுமென்பதுதான் உன் எண்ணமா?’’ - அவள் கண்கள் கண்ணீரை உகுத்தன.
``தங்கையின் செருப்பை அண்ணன் தூக்குவது தவறல்ல. பேசாதிரு. பெரியவர் பீஷ்மரிடம் உன் கோரிக்கையைச் சொன்னாயல்லவா" என்றான் கண்ணன்.
பீஷ்மர் குறுக்கிட்டு, ``மாயவனே! அவள் ஏதும் என்னிடம் சொல்லவில்லை. ஆனால், நான் என்ன சொல்ல வேண்டுமென்று நீ தீர்மானித்திருக்கிறாயோ அதை நான் அந்தப் பெண்ணுக்கு ஆசிமொழியாகச் சொல்லிவிட்டேன். நீ பொல்லாதவன். *உன்னை அபயம் என்றெண்ணியிருப்போரைக் காக்க, அவர்களின் பாதணிகளைக்கூட தாங்கிக் கொண்டிருப்பாய்*. பாண்டவர்களுக்கு உன் அருள் இருக்கும்போது இந்த பீஷ்மனால் அவர்களை என்ன செய்துவிட முடியும்? கோபாலா, நீ யார் என்பதை நன்றாக அறிந்தவன் நான். ஏதோ உணர்ச்சிவசத்தில் என்னால் எல்லாம் ஆகுமென்று நினைத்து விட்டேன். அந்தத் தவற்றைச் சுட்டிக்காட்ட, பக்தர்களை ரட்சிக்கும் பக்தவத்சலனாக இப்படி பாஞ்சாலியின் பாதணிகளைச் சுமந்து வந்து நிற்க வேண்டுமா?’’ என்று வினவினார். பிதாமகரின் கண்களிலும் நீரருவிகள் கொப்பளித்தன.
மறுநாள் போரில் அந்தப் பழுத்த பழம் அம்புப் படுக்கையில் விழுந்ததைத்தான் பாரதம் சொல்லுமே?
நீங்கள் கண்ணனை நீங்காது நினைத்திருங்கள், மற்றவை அவன் கடமை.
ஸர்வம் கிருஷ்ணார்ப்பணம்.

"சம்பு வைத்தியமா? வசம்பு வைத்தியமா?"

"சம்பு வைத்தியமா? வசம்பு வைத்தியமா?"

 (ரெண்டு கிட்னியும் செயலிழந்த பக்தருக்கு அருளிய சம்பவம்)

நன்றி- குமுதம்.லைப் (ஓரு பகுதி)
 

தொகுப்பு-வெ.ஐஸ்வர்யா.
 

தட்டச்சு-வரகூரான் நாராயணன்

ஒரு சமயம் மகாபெரியவா.ஸ்ரீமடத்துல இருந்த நேரம். அவரைப் பார்க்கறதுக்காக ஒரு பக்தர் வந்திருந்தார்.

அந்த வரிசையில நிற்கற சமயத்துலயே அவரோட
கண்ணுலேர்ந்து வழிஞ்சுண்டு இருந்த நீர், அவர்
ஏதோ பெரிய கஷ்டத்துல இருக்கார்ங்கறதை
உணர்த்தித்து. வழக்கமா, யாராவது பெரிய சங்கடத்தோட வந்திருக்கான்னு தெரிஞ்சா, மகாபெரியவா அதை தானாவே உணர்ந்து, அவாளைக் கூப்பிடச் சொல்லி முன்கூட்டியே தரிசனம் தந்து அவாளுக்கு ஆறுதலோ,
ஆலோசனையோ சொல்லி அனுப்புவார்.அதே மாதிரி, இவரையும் ஆசார்யா கூப்பிடுவார்னு வழக்கமா வர்றவா பலரும் நினைச்சா. ஆனா,அப்படி எதுவும் நடக்கலை.


வரிசை நகர்ந்து தன்னோட முறை வந்து மகாபெரியவா முன்னால போய் நின்னதும் ,அதுவரைக்கும் சத்தம் இல்லாம
அழுதுண்டு இருந்தவர்,வாய்விட்டுக் கதறி, 'ஓ'வென்னு அழ ஆரம்பிச்சுட்டார்.,சில நிமிஷத்துக்கு அப்புறம்.


"பெரியவா...நீங்கதான் என்னைக் காப்பாத்தணும்..
என்னோட கிட்னி ரெண்டும் சரியா வேலை செய்யலைன்னு டாக்டரெல்லாம் சொல்றா. ஆறேழு மாசமா மருந்தெல்லாம் எடுத்துக்கறேன்.ஆனா, ஒரு துளி முன்னேற்றமும் இல்லை. நாளுக்கு நாள் மோசமாகிண்டுதான் இருக்குன்னு சொல்றா..
என்அக்கு என்ன பண்ண்றதுன்னே தெரியலை.. அதான் இங்கே ஓடி வந்திருக்கேன்...!" தழுதழுப்பா சொன்னார்.


 "ஓஹோ...ஒனக்குப் பிரச்னை வந்ததுக்கு அப்புறம்தான் நல்லதெல்லாம் ஞாபகத்துக்கு வருதோ?" வழக்கமா கஷ்டம் பிரச்னைன்னு வர்றவாகிட்டே கொஞ்சம் ஆறுதலா பேசக்
கூடிய மகாபெரியவா, அவர்கிட்டே ஏதோ கொஞ்சம்
கடுமையாவே பேசினார்


வந்தவர்,கையைப் பிசைஞ்சுண்டு எதுவும் பேசாம
தலைகுனிஞ்சு நிற்க ஆசார்யாளே பேசத் தொடங்கினார்.


"தானம்,தர்மம்,நல்ல காரியங்கள். இதெல்லாம் அந்தக் காலத்துல பலரும் பண்ணிண்டு இருந்தா. நாடும்,அவா அவா குடும்பமும் செழிப்பா இருந்தது. எல்லாருக்கும் எல்லாமும் கிடைச்சுது.சுபிட்சமும் நிலவித்து. ஆனா இப்போ,முன்னோர்கள்
என்ன்வோ முட்டாள்தனமா செலவு பண்ணிட்டதா
நெனைச்சுண்டு அவா செஞ்ச தர்மகாரியத்தை எல்லாம் மூட்டை கட்டி வைச்சுட்டா இந்தத் தலைமுறைக்காரா.


 எப்போ தர்ம காரியங்களைத் தடுத்து நிறுத்தறோமோ அப்பவே இந்த மாதிரி சங்கடமெல்லாம் தலைதூக்கறதுக்கு நாமளே வழி செஞ்சு விட்டுடறோம். அதெல்லாம் வந்ததுக்கு அப்புறம்
 

வந்துடுத்தே வந்துடுத்தேன்னு பிராயச்சித்தம் தேடறோம்!" கொஞ்சம் கடுமையாகவே சொன்னார்,மகாபெரியவா

வந்தவர் அப்படியே மகாபெரியவர் திருவடியில விழுந்தார். ".என்னை மன்னிச்சுடுங்கோப்பெரியவா. என்னோட முன்னோர்கள் மாசத்துக்கு ஒருதரம் அன்னதானம் செய்யறதையும்,நிரந்தரமா தண்ணீர்ப் பந்தல் வைக்கறதையும் வழக்கமா வைச்சிருந்தா. அதுக்காக தனியா இடமெல்லாம் கூட இருந்தது. நான் பாவீ! அதெல்லாம் வீண் விரயம்னு எல்லாத்தையும் நிறுத்திட்டு,அந்த இடத்தையும் வித்துட்டேன்..! அந்தப் பாவம்தான் போல இருக்கு எனக்கு. இப்படி ஒரு தீராக் கஷ்டம் வந்துடுத்து...!"
சொன்னவர் வாய்விட்டுக் கதறி அழுதார்.

ஒரு சில நிமிஷத்துக்கு அப்புறம்,"பெரியவா, நான் நிறுத்தின எல்லாத்தையும் மறுபடியும் ஆரம்பிச்சுடறேன். எனக்கு நீங்க ஆசிர்வாதம் மட்டும் பண்ணினாலே போதும்.இந்த கிட்னி பிரச்னையை எனக்கு கிடைச்ச தண்டனையா ஏத்துக்கறேன்!:
 

தழுதழுக்கச் சொன்னார்

அன்பே வடிவான தெய்வம் யாரையாவது தண்டிக்க நினைக்குமா என்ன? அது நினைப்பதெல்லாம் தவறை உணரணும் என்பதைத்தானே..! தவறை உணர்ந்தாலே மன்னிப்பு அருளும் மகத்தானது அல்லவா தெய்வம்! வந்தவரை மன்னிச்சுட்டதுக்கு
அடையாளமா வாத்ஸல்யமா பார்த்தார் மகாபெரியவா.


"நாட்டு மருந்துக் கடையில வசம்புன்னு ஒரு மருந்து விற்பா... பிள்ளைவளர்ப்பான்னு அதுக்கு சூசகமான பேரு உண்டு. சந்தனக் கல்லுல உரைச்சு, தினமும் உன் தொப்புளைச் சுத்திப் போட்டுக்கோ..!" சொன்ன பெரியவா, ஆசிர்வதிச்சு அவரை அனுப்பினார்.

பத்துப் பதினைஞ்சு நாள் கழிஞ்சிருக்கும்.ரொம்ப சந்தோஷமா வந்தார் அந்த பக்தர்.ஆசார்யாளை சாஷ்டாங்கமா நமஸ்காரம் பண்ணினார்.

"பெரியவா,நீங்க சொன்ன மாதிரியே செஞ்சேன் .நேத்திக்கு என்னை பரிசோதிச்ச டாக்டர்கள், 'சிறுநீரகத்துல எந்தக் குறையுமே இல்லை.இது என்ன அதிசயம்!'னு கேட்கறா...

'சாட்சாத் சம்புவாகவே (சிவபெருமான்) நடமாடிண்டு இருக்கற மகாபெரியவா சொன்ன வசம்பு வைத்தியம்!னு சொன்னேன்..!" சொல்லித் தழுதழுத்தார்.

"நானெல்லாம் ஒண்ணும் பண்ணலை. ஒன் முன்னோர் பண்ணின தர்மகார்யத்தோட புண்ணியம் ஒன்னைக் காப்பாத்தியிருக்கு. இனிமேலாவது அதையெல்லாம் விடாம பண்ணு...க்ஷேமமா
இருப்பே..!" ஆசிர்வாதம் பண்ணின ஆசார்யாளோட குரல், அங்கே இருந்தவா எல்லாருக்கும் கடவுளோட குரலாகவே ஒலிச்சுது!.