Wednesday 4 March 2020

மடத்து வாசலில் பயில்வான் தோற்றத்துடன் மணக்கால் கிருஷ்ண சாஸ்திரிகள்

 
மடத்து வாசலில் பயில்வான் தோற்றத்துடன் மணக்கால் கிருஷ்ண சாஸ்திரிகள்
(பயந்து ஓடிய ஒரிஜனல் பயில்வான்)
(ஒரு பயில்வான் மிகவும் வீறாப்புடன் மடத்துக்கு வரப் போகிறான் என்பது பெரியவாளுக்கு எப்படித் தெரிந்தது? அது தான் புதிர்!)

சொன்னவர்; ஸ்ரீமடம் பாலு.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

(முன்பே இந்த பதிவை போட்டு இருக்கேன் அது தினமலர் - இது பாலு)

காஞ்சீபுரத்துக்கு ஒரு பயில்வான் வந்தான்.அவனுடைய உடல்பலம் அளவிட முடியாதது என்று சொன்னார்கள். ஒரு பிடி எள்ளைக் கொடுத்தால் எண்ணெயாகப் பிழிந்து தருவான்.சிலம்பாட்டம் குத்துச் சண்டைகளில் பல பேர்களுடன் மோதி வெற்றி பெற்றிருக்கிறான். அதனால் ஒரு கூட்டம் அவனை மொய்த்துக் கொண்டிருந்தது

பெரியவாளிடம் தன் வீரத்தைக் காட்டி சன்மானம் பெற வேண்டும் என்ற நோக்கம் அவனுக்கு. பெரியவா முன்னிலையில் தன் சாகசங்களைக் காட்டவும் தயாராக இருந்தான் அதாவது, 'இவனுடன் குஸ்தி போடு' என்று பெரியவா,ஒரு நபரைக் காட்டினால்,அவருடன் மல்யுத்தம் செய்வதற்கும் சித்தமாயிருந்தான்

ஸ்ரீ மடத்துக்கு அவ்வப்போது வந்து கைங்கர்யம் செய்யும் இளவயது வைதிகர் மணக்கால் கிருஷ்ண சாஸ்திரிகள், பருமனான உடற்கட்டு உடையவர்

பெரியவா கிருஷ்ண சாஸ்திரிகளைக் கூப்பிட்டார்கள்.

"கிருஷ்ணா, நீ போய் மடத்து வாசல்லே நில்லு. ஒரு மணி நேரம் இந்தண்டை - அந்தண்டை போகக் கூடாது,என்ன?" - பெரியவா

"உத்தரவு..." - கிருஷ்ண சாஸ்திரிகள்.

கிருஷ்ண சாஸ்திரிகள் உட்பட, யாருக்குமே இந்த விசித்திரமான உத்திரவின் உட்கருத்து விளங்கவில்லை. என்றாலும், பெரியவா உத்திரவுப்படி கிருஷ்ண சாஸ்திரிகள், ஸ்ரீ மடம் வாசலில் நிலையாக நின்று கொண்டார். ஒரு மணி நேரம் கழித்துத் தான் உள்ளே வந்தார்.பின்னர் பெரியவா பூஜையை முடித்துக்கொண்டு வந்ததும் உத்திரவு பெற்றுக் கொண்டு மணக்காலுக்குப் புறப்பட்டார்.

காஞ்சீபுரத்துக்கு வந்த பயில்வானுக்கு நெருக்கமான உள்ளூர்க்காரர் ஒருவர், அன்றிரவு தரிசனத்துக்கு வந்தார். அவர், அணுக்கத் தொண்டர்களிடம், " மடத்தில் வைதிகர்கள், கைங்கர்யர்கள் இருப்பார்கள்.பயில்வான்களைக் கூட , நியமித்திருக்கிறார்களா?" என்று தொண்டர்களிடமே கேட்டார்.

"கேள்வியே விநோதமாக இருக்கோ? மடத்தில் பயில்வான்களை வைத்துக்கொண்டா ரக்ஷிக்க வேண்டும்?"

......இந்த ஊருக்கு வந்த பிரபலமான ஒரு பயில்வான், காலை சுமார் பத்து மணிக்கு மடத்துக்கு வந்தார்.வாசலில் பலசாலியான ஒரு பயில்வான் நிற்பதைப் பார்த்துவிட்டு,
பயந்துகொண்டு உள்ளே வந்து தரிசனம் செய்யாமலே திரும்பிவிட்டார. அவரை சென்னைக்கு அனுப்பி விட்டுத் தான், நான் இங்கே வந்திருக்கிறேன்....."

சிஷ்யர்கள் 'ஓ'வென்று அட்டகாசமாகச் சிரித்தார்கள்."மணக்கால் கிருஷ்ண சாஸ்திரிகளை வாசலில் நிற்கச் சொன்னார்கள்,பெரியவா. அதன் காரணம் இப்போ தான் புரியறது.. .அவரைப் பார்த்துத் தான் பயில்வான் பயந்திருக்கிறான்!..."

ஒரு பயில்வான் மிகவும் வீறாப்புடன் மடத்துக்கு வரப் போகிறான் என்பது பெரியவாளுக்கு எப்படித் தெரிந்தது?

அது தான் புதிர்!.

"அவன் செத்துப் போகல்லே...சிவலோகம் போயிருக்கான்"


"அவன் செத்துப் போகல்லே...சிவலோகம் போயிருக்கான்"
(அவ்வூர்க்காரர் வந்து;"அவர் செத்துப் போய்விட்டார்" சொன்னதுக்கு-பெரியவாளின் பதில்.)
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா தட்டச்சு;வரகூரான் நாராயணன்
ஆசாரசீலரான முதிய பக்தர் கிருஷ்ணமூர்த்தி. பையன்கள் வெளிநாடுகளில் வேலை செய்து கொண்டிருந்தார்கள்.
அவருடைய மனைவி சமீபத்தில் தான் காலமாகி விட்டிருந்தாள்.
இவர் மட்டும் இங்கே எப்படித் தனியே இருப்பது?
பையன்கள் தங்களிடம் வந்து தங்கும்படி அன்போடு அழைக்கிறார்கள்.
"என்ன செய்வது என்றே புரியல்லே. பெரியவா உத்தரவுப்படி நடக்கிறேன்."
பெரியவாளின் பார்வை எங்கெல்லாமோ சுழன்று விட்டு கிருஷ்ணமூர்த்தியின் மேல் வந்து நின்றது .
"வெளிதேசம் எங்கேயும் போகவேண்டாம். வீட்டிலேயே ஸ்வயம் பாகம் பண்ணிச் சாப்பிடு."
"சரி..."
"காவேரி ஸ்நானம்,சிவபூஜை,ஜபம்,கோயில் தரிசனம் செய்து கொண்டு - உன் அப்பா,தாத்தா ,கொள்ளுத் தாத்தா மாதிரி - கிராமத்திலேயே ஒரு ரிஷியைப் போல இரு..."
கிருஷ்ணமூர்த்திக்கு அளவற்ற திருப்தி!
"அப்பனே, குருநாதா! கொஞ்சநஞ்சமிருந்த சஞ்சலத்தையும் போக்கிவிட்ட மகாபிரபுவே!. ..இந்த உபதேசத்தைக் கேட்பதற்காகத் தான் வந்தேன்.
பிரசாதம் கொடுத்து அவரை அனுப்பி வைத்தார்கள் பெரியவாள்
அதன் பின்னர் அந்தக் கிராமத்திலிருந்து யாராவது தரிசனத்துக்கு வந்தால், "கிருஷ்ணமூர்த்தி எப்படி இருக்கான்?" என்று நினைவாகக் கேட்பார்கள்.
வெகு நாள் கழித்து, அவ்வூர்க்காரர் வந்து; "அவர் செத்துப் போய்விட்டார்" என்றார்,இரக்கம் தோன்ற.
பெரியவா பட்டென்று, "அவன் செத்துப் போகல்லே... சிவலோகம் போயிருக்கான்" என்றார்கள்.
கேட்டுக் கொண்டிருந்த தொண்டர்களுக்கெல்லாம் உடம்பு சிலிர்த்தது.
பெரியவாளுடைய கருணை இன்னும் ஒருபடி மேலே போயிற்று. சிஷ்யர்களில் ஒருவரைக் கூப்பிட்டு, "நீ போய் கிருஷ்ணமூர்த்தியை மனசிலே நினைச்சுண்டு குளத்திலே ஸ்நானம் பண்ணிட்டு வா" என்றார்கள்.