Wednesday 4 March 2020

"அவன் செத்துப் போகல்லே...சிவலோகம் போயிருக்கான்"


"அவன் செத்துப் போகல்லே...சிவலோகம் போயிருக்கான்"
(அவ்வூர்க்காரர் வந்து;"அவர் செத்துப் போய்விட்டார்" சொன்னதுக்கு-பெரியவாளின் பதில்.)
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா தட்டச்சு;வரகூரான் நாராயணன்
ஆசாரசீலரான முதிய பக்தர் கிருஷ்ணமூர்த்தி. பையன்கள் வெளிநாடுகளில் வேலை செய்து கொண்டிருந்தார்கள்.
அவருடைய மனைவி சமீபத்தில் தான் காலமாகி விட்டிருந்தாள்.
இவர் மட்டும் இங்கே எப்படித் தனியே இருப்பது?
பையன்கள் தங்களிடம் வந்து தங்கும்படி அன்போடு அழைக்கிறார்கள்.
"என்ன செய்வது என்றே புரியல்லே. பெரியவா உத்தரவுப்படி நடக்கிறேன்."
பெரியவாளின் பார்வை எங்கெல்லாமோ சுழன்று விட்டு கிருஷ்ணமூர்த்தியின் மேல் வந்து நின்றது .
"வெளிதேசம் எங்கேயும் போகவேண்டாம். வீட்டிலேயே ஸ்வயம் பாகம் பண்ணிச் சாப்பிடு."
"சரி..."
"காவேரி ஸ்நானம்,சிவபூஜை,ஜபம்,கோயில் தரிசனம் செய்து கொண்டு - உன் அப்பா,தாத்தா ,கொள்ளுத் தாத்தா மாதிரி - கிராமத்திலேயே ஒரு ரிஷியைப் போல இரு..."
கிருஷ்ணமூர்த்திக்கு அளவற்ற திருப்தி!
"அப்பனே, குருநாதா! கொஞ்சநஞ்சமிருந்த சஞ்சலத்தையும் போக்கிவிட்ட மகாபிரபுவே!. ..இந்த உபதேசத்தைக் கேட்பதற்காகத் தான் வந்தேன்.
பிரசாதம் கொடுத்து அவரை அனுப்பி வைத்தார்கள் பெரியவாள்
அதன் பின்னர் அந்தக் கிராமத்திலிருந்து யாராவது தரிசனத்துக்கு வந்தால், "கிருஷ்ணமூர்த்தி எப்படி இருக்கான்?" என்று நினைவாகக் கேட்பார்கள்.
வெகு நாள் கழித்து, அவ்வூர்க்காரர் வந்து; "அவர் செத்துப் போய்விட்டார்" என்றார்,இரக்கம் தோன்ற.
பெரியவா பட்டென்று, "அவன் செத்துப் போகல்லே... சிவலோகம் போயிருக்கான்" என்றார்கள்.
கேட்டுக் கொண்டிருந்த தொண்டர்களுக்கெல்லாம் உடம்பு சிலிர்த்தது.
பெரியவாளுடைய கருணை இன்னும் ஒருபடி மேலே போயிற்று. சிஷ்யர்களில் ஒருவரைக் கூப்பிட்டு, "நீ போய் கிருஷ்ணமூர்த்தியை மனசிலே நினைச்சுண்டு குளத்திலே ஸ்நானம் பண்ணிட்டு வா" என்றார்கள்.

No comments:

Post a Comment