Thursday, 23 April 2020

வேதத்துக்கு “ச்ருதி” என்று ஒரு பேர்.

வேதத்துக்கு “ச்ருதி” என்று ஒரு பேர். 

கேட்கப்படுவது எதுவோ அதுவே ச்ருதி. 

ச்ரோத்ரம் என்றால் காது. புஸ்தகத்தில் எழுதிப் படிக்காமல், குரு சிஷ்ய பரம்பரையாக வாயால் சொல்லிக் காதால் கேட்டே வேதம் தலைமுறை தலைமுறையாக வந்திருப்பதால் அதற்கு “ச்ருதி” என்று பேர் ஏற்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். 

எழுதிப்படிக்கக் கூடாது என்று ஏன் வைத்தார்கள் என்றால் வேத சப்தங்களை இப்படி எழுத முடியாது என்பதால்தான். 

‘ழ’வுக்கும், ‘ள’வுக்கும் நடுவிலுள்ள சப்தம் மாதிரி, லிபியில் கொண்டு வர முடியாத பல சப்தங்கள் வேதத்தில் உண்டு. 

காதால் கேட்டுத்தான் இவை வரவேண்டும். 

அதோடுகூட உதாத்தம், அநுதாத்தம், ஸ்வரிதம் என்றெல்லாம் வேத மந்திரங்களுக்கு ஸ்வரமும் உண்டு. 

அதாவது ஒரு அக்ஷரத்தை உயர்த்த வேண்டும். இன்னொன்றைத் தாழ்த்திச் சொல்ல வேண்டும். 

சிலதை ஸமமாகச் சொல்ல வேண்டும். 

புஸ்தகத்தில் எத்தனைதான் diacritical mark போட்டு காட்டினாலும், அச்சுப்பிழை வந்து விட்டால், உச்சாரணக் கோளாறாகும்; 

உச்சரிப்பு தப்பினால் பலனே போய்விடும்

ஓர் அக்ஷரத்தை அழுத்தி அல்லது மெல்லிசாகச் சொல்லுகிறதால் ஏற்படுகிற சலனத்துக்கும் இன்னோர் அக்ஷரத்தை அப்படிச் சொல்வதால் உண்டாவதற்கும் நிறைய வித்யாஸமிருக்கும். 

நம்முடைய உணர்ச்சிகள், இயற்கையை நடத்தி வைக்கும் தேவசக்திகள், இவையும் இந்த வித்யாஸத்துக்கு ஏற்ப மாறிப் போகும்
ரேடியோவில் ஒரு wave-length (அலைவரிசை) கொஞ்சம் தப்பினால்கூட, வேறு ஏதோ ஸ்டேஷனை அல்லவா பிடித்து விடுகிறது? 

மயிரிழை தப்பாமல் ரேடியோவில் வேவ்-லெங்க்த் வைத்தால்தானே சரியாகக் கேட்கிறது? 

இப்படியேதான் வேத உச்சாரணமும். கொஞ்சம்கூட ஸ்வரம் தப்பிப் போகக் கூடாது.

வேவ் – லெங்க்த் மாறினால் ஸ்டேஷன் மாறிவிடுகிற மாதிரி, வேத சப்தம் மாறினால் பலனே மாறிவிடும்.

நம்முடைய பிறப்பு பூர்வ கர்மாவை அநுஸரித்து ஈஸ்வரனாலேயே நிர்ணயிக்கப்படுகிறது என்பதே சாஸ்திரம்

நம்முடைய பிறப்பு பூர்வ கர்மாவை அநுஸரித்து ஈஸ்வரனாலேயே நிர்ணயிக்கப்படுகிறது என்பதே சாஸ்திரம். 
அதனால் நாம் ஏதோ ஒரு மதத்தில், ஸம்ப்ரதாயத்தில் பிறந்திருக்கிறோமென்றால், அதுவே கர்மவசாத் ஈஸ்வரனால் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது என்று அதை வரவேற்று, இதைக் கொண்டே நாம் கர்மாவைப் போக்கிக் கொண்டு நம்மை மேம்படுத்திக் கொள்ள முயல வேண்டும்.
 அவரவர்கள் தாங்கள் பிறந்த ஸம்ப்ரதாயத்தையும் குலாசாரத்தையும் ரக்ஷிக்கிற ஆசார்யார்களின் உபதேசப்படி நடந்தாலே போதும்.

Wednesday, 22 April 2020

கொஞ்ச நாளைக்கு உங்களோடையே இருக்கணும்னு ரொம்ப ஆசையா இருக்கு.! -பாலகிருஷ்ண ஜோஷி

கொஞ்ச நாளைக்கு உங்களோடையே இருக்கணும்னு ரொம்ப ஆசையா இருக்கு.! -பாலகிருஷ்ண ஜோஷி
.
"என்ன.....மடத்துலேயா? இங்க சன்யாசிகள்னா தங்குவா! ஒன்னாட்டம் பசங்களுக்கு இங்க என்ன வேலை? ஸ்வாமி தரிசனம் பண்ணிட்டு ஊர் போய் சேரு"--(மேற்படி பாலக்ருஷ்ண ஜோஷியிடம் என் மனைவி மூக்குத்தி வாங்கியிருக்கிறாள்.2000 ஆண்டு காலமாகி விட்டார்.இந்த விவரம் அவர் மகன் ஸ்ரீதர் ஜோஷியிடம் கேட்டு அறிந்தேன்.பார்க்டவுனில் கடை இருக்கு. வரகூரான்.நாராயணன்).

.
ஜோஷி என்ற வடக்கத்தி பையன் பெரியவாளிடம் ரொம்ப பக்தி. அவனுக்கு பெரியவாளை தரிசனம் பண்ணியதிலிருந்து ஊருக்கு போகவே மனசில்லை. அவன் நமஸ்காரம் பண்ணிவிட்டு எழுந்ததும் அவனைப் பற்றி விஜாரித்து விட்டு, "இந்த ஊர்ல இருக்கற கோவில் எல்லாத்தையும் தரிசனம் பண்ணிட்டு ஊருக்கு போ" என்றார்.
பாலக்ருஷ்ண ஜோஷி சற்று தைரியமாக "நன்னா புரியறது பெரியவா. உங்க உத்தரவுப்படியே எல்லாக் கோவிலையும் தரிசனம் பண்ணிட்டு, திரும்ப மடத்துக்கே வந்துடறேன்"
பெரியவா லேசுப்பட்டவரா என்ன? சிரித்துக் கொண்டே " அதான் பிரசாதமெல்லாம் இப்பவே குடுத்துடப் போறேனே! திரும்ப எதுக்கு மடத்துக்கு வரப் போறே? ஓஹோ.......ஸ்வாமி தரிசனம் பண்ணிட்டு மத்யான்னம் மடத்துல சாப்டுட்டு பஸ் ஏறலாம்னு முடிவு பண்ணிட்டியாக்கும்? பேஷ்.! பேஷ்!" என்றார்.
ஜோஷியின் கண்களில் கண்ணீர் கட்டி நின்றது "ஏம்பா அழறே?"
"கொஞ்ச நாளைக்கு உங்களோடையே இருக்கணும்னு ரொம்ப ஆசையா இருக்கு. அதனாலே............"
"என்ன.....மடத்துலேயா? இங்க சன்யாசிகள்னா தங்குவா! ஒன்னாட்டம் பசங்களுக்கு இங்க என்ன வேலை? ஸ்வாமி தரிசனம் பண்ணிட்டு ஊர் போய் சேரு"
சாஷ்டாங்கமாக பெரியவா சரணத்தில் விழுந்தான் "பெரியவா அப்படி சொல்லப்படாது. நேக்கு மடத்துல தங்கி, ஒங்களுக்குகொஞ்ச நாள் கைங்கர்யம் பண்ணனும்னு ரொம்ப ஆசையா இருக்கு"
"நேக்கு கைங்கர்யம் பண்ண நெறைய பசங்கள் இருக்கா. நீ கெளம்பற வழியப் பாரு"
ஜோஷி மடத்தைவிட்டுப் போகவில்லை. நான்கு நாட்கள் விடாமல் பெரியவா கண்ணில் படுவதுபோல், அவர் அறை வாசலில் கால் கடுக்க நிற்பான், அவர் போகுமிடமெல்லாம் போவான். ஐந்தாம் நாள் "நீ இன்னும் மெட்ராஸ் போகலை?" தெரியாதவர் போல் கேட்டார்.
"இல்லை பெரியவா. நான் மெட்ராஸ்லேர்ந்து கெளம்பறச்சே ஒரு சங்கல்பம் பண்ணிண்டு கெளம்பினேன்"
"அப்படி என்ன சங்கல்பமோ?" கிண்டலாக கேட்டார்
"கொஞ்ச காலம் உங்களோட பாதாரவிந்தங்கள்ள சேவை பண்ணறதுதான் பெரியவா"
"சாத்தியமில்லாத சங்கல்பத்தை பண்ணிக்கப்படாது" அங்கிருந்து போய் விட்டார். ஜோஷி மனஸ் தளரவேயில்லை.
ரெண்டு நாள் கழித்து தரிசனம் குடுத்துக் கொண்டிருந்தபோது அவனைப் பார்த்த பெரியவாளின் மனஸ் நெகிழ்ந்தது
.

"ஒங்கப்பாவுக்கு உத்தியோகமா? வியாபாரமா?"
"வைர வியாபாரம் பெரியவா"
"ஒன்னோட குணத்துக்கு பிற்காலத்ல நீயும் பெரியா வைர வியாபாரியா வருவே. அப்போ......நீ நேர்மையான வைர வ்யாபாரிங்கற பேரை வாங்கணும். சரி! சரி! ஒன் ஆசைப்படியே கொஞ்ச நாள் மத்த பசங்களாட்டம் கைங்கர்யம் பண்ணிட்டு போ" பச்சைக் கொடி காட்டினார் பெரியவா.
இரவில் பெரியவா சயனிக்கும் அறைக்குள்ளேயே படுத்துக் கொள்ளும் பாக்யம் பெற்றான். ஒரே சந்தோஷம்! மூன்றாம் நாள் பெரியவா சொன்னார் " பாலக்ருஷ்ண ஜோஷி.....நீ இனிமே ஒரு கார்யம் பண்ணி ஆகணும்! பகல் பூர எங்கூட இருந்து மத்தவா மாதிரி கைங்கர்யம் பண்ணு. ராத்திரி வேளைல மட்டும் நீ இங்க படுத்துக்க வேணாம்......." சொல்லி முடிப்பதற்குள் பதறிப்போன ஜோஷி "பெரியவா அப்படி மட்டும் சொல்லிடாதீங்கோ! நானும் மத்தவா மாதிரி இந்த ரூம்லேயே படுத்துக்கறேன். க்ருபை பண்ணணும்" அழுதான்.
"நான் காரணமாத்தான் சொல்றேன். நீ கேக்கணும்"
"சரி கேக்கறேன்" மனசில்லாமல் ஒத்துக் கொண்டான்.
"அப்டி சொல்லு. ராத்திரி நேரா சமையல்கட்டுக்கு போ! அங்க அடுப்புக்கு பக்கத்ல ஒரு பெரிய மர பெஞ்ச் கெடக்கும். அதுல சௌகர்யமா படுத்துண்டு தூங்கு. விடியக்காலம் எழுந்து பல் தேச்சு, ஸ்நானம் பண்ணிட்டு இங்க கைங்கர்யத்துக்கு வந்துடு.......என்ன புரியறதா?" கறாராக கட்டளையிட்டார்.
மற்ற பையன்கள் இங்கே இருக்க, தன்னை மட்டும் சமையல்கட்டுக்கு ஏன் அனுப்பினார்? மனஸ் பாரமாக, ஒரு பையனிடம் "ஏண்டா, உங்கள்ள யாரையாவது பெரியவா இதுவரைக்கும் ராத்திரி கோட்டை அடுப்பங்கரைல போய் தூங்க சொல்லியிருக்காளா?"
"சேச்சே! எங்க யாரையும் பெரியவா அப்படி சொன்னதே கெடையாது" முகத்தை சுளித்துக் கொண்டு பதில் சொன்னான்.
ஜோஷிக்கு ஒரே அவமானம். கேவி கேவி அழுதுகொண்டே வெறிச்சோடிக் கிடந்த அடுப்பங்கரை பெஞ்சில் படுத்துக் கொண்டான். ஒன்றும் சாப்பிடவில்லை. துக்கம் தொண்டையை அடைத்தது. விடிந்து ஸ்நானம் பண்ணிவிட்டு, காமாக்ஷி அம்மன் கோவில் சந்நிதியில் உட்கார்ந்து கொண்டான். பெரியவா கைங்கர்யத்துக்கு போகணும் என்று தோன்றவில்லை. மத்யான்னம் மடத்துக்கு வந்து சாப்பிட்டான் திரும்ப காமாக்ஷியிடமே போய் உட்கார்ந்தான். இரவு மடத்து அடுப்பங்கரை. பெரியவா பக்கமே போகவில்லை. மூன்றாம் நாள் காலை பெரியவா ஒரு பையனிடம் "ஏண்டாப்பா, ரெண்டு நாளைக்குமுன்னாடி பாலக்ருஷ்ண ஜோஷின்னு ஒரு பையன் கைங்கர்யம் பண்ண வந்தானே.........அவனை காணோமே? எங்கடா போய்ட்டான்? ஒருவேளை சொல்லிக்காம மெட்ராஸ் போயிட்டானோ?"
"இல்லே பெரியவா. இங்கதான் இருக்கான்"
"பின்ன ரெண்டு நாளா காணோமேடா..........போய் அவனை அழைச்சிண்டு வா". வந்தான். பெரியவா முன்னால் கூனிக்குறுகி நின்றான். "வா கொழந்தே! எங்க ரெண்டு நாளா ஒன்னை இந்தப் பக்கமே காணோம்? ஒடம்பு கிடம்பு சரி இல்லியோ?".
பதிலே இல்லை.
குழந்தைத்தனமான சிரிப்புடன் "என்கிட்டே ஏதாவது வருத்தமோ........கோபமோ?"
"கோபமெல்லாம் இல்லை பெரியவா.........மனசுக்கு கொஞ்சம் வருத்தம்"
"வருத்தமா! எம்பேர்லையா!!!" ஆச்சர்யமாக கேட்டார். "சொல்லு சொல்லு. ஒன் வருத்தத்தை நானும் தெரிஞ்சுக்கணுமோல்லியோ!......"
"வேற ஒண்ணும் இல்லை பெரியவா! மொதல் ரெண்டு நாள் என்னையும் ராத்ரிலே மத்த பையன்களோட இங்கியே படுத்துக்கச் சொன்னேளா.....ரொம்ப சந்தோஷமா இருந்தது. திடீர்னு முந்தாநாள் கோட்டை அடுப்புக்கு பக்கத்ல பெஞ்ச்ல போய் படுத்துக்கோ' ...ன்னு சொல்லிட்டேளே! நான் இவாள மாதிரி இந்த பக்கத்து பிராமணனா இல்லாம, குஜராத்தி பிராமணனா இருக்கறதாலே என்னை அங்க போய் படுத்துக்கச் சொல்லிட்டேளோ.ன்னு மனசுக்கு ரொம்ப கஷ்டமாயிடுத்து. அதான் ரெண்டு நாளா இங்க வரலை. என்னை மன்னிச்சுடுங்கோ பெரியவா" கதறிவிட்டான்.
பெரியவா நிலைமையை புரிந்து கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தார். மிச்ச பசங்களை வெளியே போகச் சொன்னார். பரம வாத்சல்யத்துடன் ஜோஷியை பக்கத்தில் கூப்பிட்டு
"அடடா.......பாலகிருஷ்ணா........நான் ஒன்னை கோட்டை அடுப்புக்கிட்ட பெஞ்ச்ல படுத்துக்க சொன்னதுக்கு, நீ இப்பிடி அர்த்தம் பண்ணிண்டுட்டியா? அடப்பாவமே........நான் அப்டி எல்லாம் நெனச்சுண்டு அதை சொல்லலேப்பா ......சின்னப் பையன் தப்பாப் புரிஞ்சுண்டுட்டியே ! இதுக்கு விசேஷ காரணமெல்லாம் இல்லேடா ஜோஷி........நல்ல வேளை. சொன்னியே...அதுக்கு ஒரே காரணம். இதோ பாருடா"......என்று கூறி, தான் இடையில் கட்டியிருந்த வஸ்த்ரத்தை தொடை வரை நகர்த்தி காட்டினார். ஆச்சார்யாளின் தொடைகளில் அடை அடையாய் கொசுக்கடி தழும்புகள்!!
"கொழந்தே! ஜோஷி........இதெல்லாம் என்னன்னு தெரியறதோ நோக்கு? ராத்திரி வேளைல கொசு கடிச்ச தழும்பு. நான் ஒரு சந்நியாசி. பொறுத்துக்குவேன். நீ....கொழந்தை! ரெண்டு நாள் ராத்திரி நீ கொசுக்கடில ரொம்ப ஸ்ரமப்பட்டதை பாத்தேன். என்னாட்டம் நோக்கும் சேப்பு [சிவப்பு] ஒடம்பு. அவஸ்தைப்படாம நீயாவது சௌக்யமா தூங்கட்டுமேன்னுதான் பத்ரமான எடத்துக்கு ஒன்னைப் போகச் சொன்னேன். அடுப்பு உஷ்ணத்துக்கு கொசு அங்க எட்டிக் கூட பாக்காது! நன்னா தூங்குவே! நீ என்னடான்னா........வேற விதமா, விபரீதமா நெனச்சுண்டுட்டியே!......" பெரியவா முடிக்கவில்லை.."ஹோ" வென்று கதறி அழ ஆரம்பித்துவிட்டான் ஜோஷி.
"பெரியவா என்னை மன்னிச்சேன்னு சொல்லுங்கோ. ஒங்களோட கருணையை புரிஞ்சுக்காம நான் ஏதேதோ ஒளறிட்டேன்"
காருண்யமூர்த்தி கைதூக்கி ஆசிர்வதித்தார் "ஜோஷி. பிற்காலத்ல நீயும் சிறந்த வைர வியாபாரிய வருவே. ஞாயமான வெலைக்கு வித்து நல்லபடி வியாபாரம் பண்ணு" ஆசிர்வதித்தார்

Thursday, 19 March 2020

நானும் பைத்தியமாக ஆகலாமா என்று நினைத்துப் பார்க்கின்றேன்,நீ என்னப்பா சொல்கிறாய்? - புத்தி ஸ்வாதீனமில்லாத ஒரு பையனைப் பார்த்து பெரியவா

நானும் பைத்தியமாக ஆகலாமா என்று நினைத்துப் பார்க்கின்றேன்,நீ என்னப்பா சொல்கிறாய்? புத்தி ஸ்வாதீனமில்லாத ஒரு பையனைப் பார்த்து பெரியவா

வன்முறையில் ஈடுபடாத புத்திஸ்வாதீனமில்லாதவர்கள் ஞானிகளாகலாம்
கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா . புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன் .

(முன்பு சற்று சுருக்கமான பதிவு.இப்போ விரிவானது)

ஒரு சமயம்,ஸ்ரீ பெரியவாள் கலவையில் பல தினங்கள் தங்கியிருந்தார்கள்.அப்போது ஓர் ஏகாதசி நாளன்று அவர்கள், கலவையிலிருந்து சற்று தூரத்தில் உள்ள மடுவிருக்குமிடம் சென்று, மடுவில் ஸ்நானம் செய்து கொண்டிருந்தார். பெரியவர்களுக்குக் கைங்கர்யம் செய்பவர்கள் சிலரைத் தவிர, அங்கு வேறு எவருமில்லை. அப்போது அவ்விடத்திற்கு ஒரு மனிதர் தன் மனைவியுடன், ஒரு பையனைக் கையில் பிடித்து அழைத்துக் கொண்டு வந்து சேர்ந்தார். அனுஷ்டானம் முடிந்தபின், அவர்கள் வந்தனம் செய்து எழுந்தனர்.ஸ்ரீஸ்வாமிகள் அவர்களை உட்காரச் சொன்னார்கள்.அவர்கள் உட்காரவில்லை.

வந்த மனிதரும் அவர் மனைவியும், "எங்கள் மகன் இவன், புத்திஸ்வாதீனமில்லாதவனாக நடந்து கொள்கிறான்.பெரியவாள் கருணை புரியவேண்டும்" என்று மிகுந்த வருத்தத்துடன் சொன்னார்கள். பெரியவர்கள் புன்சிரிப்புடன் சிறுது நேரம் மௌனமாக இருந்தார்கள். சில நிமிஷங்கள் கழிந்தபின் பேச ஆரம்பித்தார்கள்

.(பெரியவா சொன்ன 7 கதைகள் கீழே)

"இந்த உலகமே பைத்தியக்காரத்தனமான உலகம் தான்.பரமேச்வரனையே, 'பித்தா பிறைசூடி' என்று பாடி ஒரு நாயனார் ஈச்வரனுக்கே பைத்தியக்காரப் பட்டம் கட்டவில்லையா? மதுரையில் ஒரு சமயம், பரமேச்வரன் கூலியாளாக வந்து பிட்டுக்காக மண் சுமந்தார்.பைத்தியக்காரனைப் போல் ஆடிக்கொண்டும், சேஷ்டைகள் செய்துகொண்டும்,வைகை வெள்ளத்தைத் தடுக்கும் நோக்கத்தில் பலருடன் தானும் மண் சுமந்துகொண்டு போனார். அவருடைய சேஷ்டைகளைக் கவனித்த அரசனின் அதிகாரிகள் அவரை அடித்தார்கள். அந்த அடி, அரசன் உள்பட அனைவரின் முதுகிலும் பட்டது.பைத்தியக்கார சேஷ்டையுடன் கூடிய கூலியாள் மறைந்துவிட்டார். இந்தக் கதையை நாம் கேட்டிருக்கிறோமல்லவா?"

"ஆதிசங்கர பகவத்பாதாள் தக்ஷிண தேச யாத்திரை செய்து வரும்போது ஸ்ரீவலி என்ற ஊரில் ஒரு சமயம் தங்கியிருந்தார்.அந்த ஊரில் நிறையப் படித்த ஒருவருக்கு ஒரு பிள்ளை. அந்தப் பையன், தாய் தந்தை உள்பட யாரிடமும் பேசுவதே இல்லை. ஆசாரியாள் ஊருக்கு வந்ததை அறிந்த பெற்றோர்கள், அந்தப்பையனை ஆசார்யாளிடம் அழைத்துவந்து,தாமும் வணங்கி,பையனையும் வணங்கும்படி செய்து, மகன் உன்மத்தனாக இருப்பதைக் கூறினார்கள்.பகவத்பாதாள் அந்தப்பையனைப் பார்த்து,"ஏனப்பா இப்படி ஜடமாகி இருக்கின்றாய்?" என்று கேட்டார்கள்."நான் ஜடமல்ல" என்று ஆரம்பித்து, வேதாந்தக் கருத்துக்களைக் கொண்ட பல ஸம்ஸ்க்ருதச் செய்யுள்களைப் பாடினான் அவனை சங்கரர் தன்னுடன் விட்டுவிடும்படி பெற்றோர்களிடம் சொல்ல, அப்பையன் ஆசார்யாளுடனே இருந்து, அவரிடம் ஸந்நியாஸம் பெற்று, 'ஹஸ்தாமலகர்' என்று பெயரையும் பெற்று, அவருடைய முக்கிய சிஷ்யர்களில் ஒருவரானார்."

"ஜடபரதரும் புத்திஸ்வாதீனமில்லாதன் என்று நினைத்து,ராஜாவின் பல்லக்கைச் சுமக்கச் சொன்னார்கள். பல்லக்கைத் தூக்கிக் கொண்டு ஆடி ஆடி வந்ததால்.அவரை ராஜாவின் சேவகர்கள் அடித்தார்கள். பிற்காலத்தில் அரசனுக்கு, ஜடபரதர் பெரிய ஞானி என்று தெரிந்தது. ராஜாவும்,மற்றவர்களும் அவருக்கு நமஸ்காரம் செய்து மன்னிப்பு கேட்டார்கள்

விஷ்ணுபக்தன் ஒருவன் மஹாவிஷ்ணுவைக் காண ஆசை கொண்டு,பைத்தியக்கரத்தனமாக கடல் நீரை மொண்டு கொட்டுவதில் ஈடுபட்ட கதை, -காஞ்சியில், ஊமையாகவும்,பைத்தியம் போலுமிருந்த மூகன் காமாக்ஷி அம்பாளின் அனுக்ரஹத்தால். கவியாக மாறி, அம்பாளின் மீது ஐநூறு ச்லோகம் பாடியவிவரமும், பிறகு - சமீப காலத்தில் காஞ்சியில் பிறந்து, திருவண்ணாமலைப் பகுதியில் பைத்தியம் போல், எது கொடுத்தாலும் சாப்பிடுவார்,ஒன்றும் சாப்பிடமாலும் இருப்பார்; எங்கு வேண்டுமானாலும் படுப்பார். இப்படி அலைந்து திரிந்து கொண்டிருந்தவரான சேஷாத்ரி ஸ்வாமிகள் பற்றிய கதையையும் அவர்களுக்குப் பெரியவாள் சொன்னார்.அந்தத் தம்பதிகளைக் காட்டிலும், அந்த புத்திஸ்வாதீனமில்லாத பையன் மிகவும் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்ததை பெரியவாள் கவனித்தார்கள்.

"என்னிடம் பல பைத்தியங்கள் வந்திருக்கிறார்கள். ஒருநாள் உங்களைப் போல் ஒரு தம்பதிகள், தங்கள் பிள்ளையுடன் வந்தார்கள்.- அந்தப் பையன், ஆறு மாதமாகப் பல் தேய்ப்பதில்லை,சாப்பிடுவதில்லை, துணிகளை மாற்றிக் கொள்வதில்லையாம். ஆனால் அவனுடைய வாய் நாற்றம் எடுப்பதில்லை. வேஷ்டியில் அழுக்கு ஏற்படுவதில்லை என்று சொன்னார்கள்.பிறகு கண்ணீர் வடிய, 'அவன் சாப்பிடாமல் பட்டினியாக இருக்கும் போது, நாங்கள் சாப்பிடுவது மனத்திற்கு மிகவும் கஷ்டமாக உள்ளது'என்றார்கள் ."அவனால் ஏதாவது சிரமம் இருக்கா என்று நான் (பெரியவாள்) கேட்டேன். அதற்கு அவர்கள் உபத்ரம் ஏதுமில்லையென்றும், அவன் யாரிடமும் பேசுவதில்லை என்றும், எப்போதாவது,'ஸ்ரீராம சிவ' என்று சொல்வான் என்றும் அப்பையனின் பெற்றோர் சொன்னார்கள்."இவனும் ஒரு மகான் தான். நீங்கள் சாப்பிடும்போது, கொஞ்சம் சாதம்,குழம்பு ஆகியவைகளை,ஸ்வாமிக்கு நைவேத்யம் செய்வதுபோல், பையன் இருக்குமிடத்தில் வைத்துவிடுங்கள். அவன் சாப்பிடாவிட்டால்,சாயங்காலம் யாராவது ஏழைகளுக்குக் கொடுங்கள்" என்று சொன்னேன்.(பெரியவா)

கேட்டுக்கொண்டிருந்த தம்பதிகளையும், பையனையும் பார்த்து ஸ்ரீ பெரியவா கூறியதாவது

; "வன்முறையில் ஈடுபடும் புத்திஸ்வாதீனமில்லாதவர்களுக்குத்தான் வைத்யம் தேவை.எவருக்கும் எந்தத் தொந்தரவும் கொடுக்காத புத்திஸ்வாதீனமில்லாதவர்கள் பற்றி அனாவசியமாகக் கவலைப்பட வேண்டாம் சொல்லப்போனால் அவர்கள். ஞானிகளாகலாம். அவர்கள் கெடுதி செய்யமாட்டார்கள். பாபகார்யங்களைச் செய்யமாட்டார்கள். அவர்களுக்குத் துவேஷம் கிடையாது. அவர்களைப் பார்க்கும்போது, நானும் பைத்தியமாக ஆகலாமா என்று நினைத்துப் பார்க்கின்றேன்." "நீ என்னப்பா சொல்கிறாய்?" என்று சிரித்தபடி ஸ்ரீ பெரியவாள் தன் முன் உட்கார்ந்திருந்த அந்தப் பையனை நோக்கிக் கேட்டார்கள்.அந்தப் பையனும் சிரித்தான்

அந்தப் பையனின் பெற்றோர்கள்,ஸ்ரீ பெரியவர்கள், வெகு நேரம் பேசியதைக் கேட்டு, பையனைப் பற்றிய வருத்தமும், மனக்கவலையும் குறைந்தவர்களாக, தெளிவுடனும் ,மனச்சாந்தியும் அடைந்தவர்களக, விடைபெற்றுச் சென்றனர். அருகிலிருந்த பெரியவர்கள் பேசியதனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த எங்களுக்கு அந்த நீண்ட பேச்சை மறக்கவே முடியாது.,

Tuesday, 17 March 2020

ஒரு வரட்டி ஒரு கோடி பெறுமோ?


ஒரு வரட்டி ஒரு கோடி பெறுமோ?

(கோடிகளைப் புறக்கணிக்கும் பெரியவாள்,வரட்டிகளைக் கேட்டு வாங்கிக்கொள்கிறார்)
(ஒரு ஏழைப் பாட்டியிடமிருந்து)
தொகுப்பாளர்-கோதண்டராம சர்மா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

ஒரு ஏழையான கிழவி. அவளுக்கு மகேஸ்வரனைத் தெரியாது; மகாப் பெரியவாளைத்தான் தெரியும்.
தினமும் வந்து வந்தனம் செய்வாள்.
பல செல்வந்தர்கள், பெரியவாளுக்குக் காணிக்கையாக, விலையுயர்ந்த பொருள்களைக் கொண்டுவந்து சமர்ப்பணம் செய்வதைப் பார்த்து, 'தன்னால் எதுவும் செய்ய முடியவில்லையே' என்று ஏங்கினாள்.
ஒருநாள் மனமுருகி பெரியவாளிடம் சொல்லி விட்டாள்.
பெரியவாள் சொன்னார்கள்;
"அவர்கள் கொண்டுவந்து கொடுக்கிற, எந்தப் பொருளையும் நான் தொடுவதுகூட இல்லை; நான் ஆசைப்பட்டுக் கேட்டதும் இல்லை.என் மனசுக்குப் பிடிக்குமான்னும் அவா நினைச்சுப் பார்த்ததில்லே! உனக்குப் பிடிச்ச ஒரு வேலை சொல்றேன், செய்கிறாயா?"
பாட்டி தவிப்போடு காத்து நின்றாள்.
"மாட்டுக் கொட்டிலில் இருந்து பசுஞ்சாணி எடுத்து, வரட்டி தட்டு. காயவைத்துக் கொண்டுவந்து கொடு. மடத்திலே தினமும் ஹோமம் நடக்கிறது.சுத்தமான பசுஞ்சாணி வரட்டி உப்யோகப்படுத்தணும். அந்த நல்ல கார்யத்தை நீ செய்யேன்..."
பாட்டியின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் !.
கோடிகளைப் புறக்கணிக்கும் பெரியவாள், வரட்டிகளைக் கேட்டு வாங்கிக்கொள்கிறார் - ஒரு பாட்டியிடமிருந்து.
ஒரு வரட்டி ஒரு கோடி பெறுமோ?

“அதோ அந்தப் பொண்ணு கட்டிண்டு இருக்கற மாதிரி எனக்கும் பச்சைப் பட்டுப் பாவாடை வேணும்..!” -



அதோ அந்தப் பொண்ணு கட்டிண்டு இருக்கற மாதிரி எனக்கும் பச்சைப் பட்டுப் பாவாடை வேணும்..!” -
(“நான் பூஜை செய்தப்ப, அம்பிகை பாலா வந்து என் மடியில உட்கார்ந்து தானும் சேர்ந்து சிவனுக்கு அர்ச்சனை செய்துகிட்டு இருந்தா. அவளைத்தான் உன் பேத்தி பார்த்திருக்கா. பாலாம்பிகை கட்டிக்கிட்டு இருந்த மாதிரியே தனக்கும் பாவாடை வேணும்னு கேட்டிருக்கா-பெரியவா)
சொன்னவர்- காஞ்சி மடத்துடன் நெருங்கிய தொடர்புள்ள பி.ராமகிருஷ்ணனின் அனுபவம் (குமுதம் பக்தி ஸ்பெஷல்)
நன்றி-பாலஹனுமான்
சின்னப் பெண் குழந்தை ஒருத்திக்கு அவ ஆசைப்பட்டுக் கேட்ட ஒரு பொருளைத் தந்த சம்பவம் நெகிழ்ச்சியானது.
ஒரு சமயம் பரமாச்சார்யார், காஞ்சி மடத்துல சந்திரமௌலீஸ்வர பூஜை செய்துகொண்டு இருந்தார். கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கும் மேல அந்த பூஜை நடக்கும். நடுவுல எதுக்காகவும் நிறுத்த மாட்டார். ஆராதனை நடத்தறப்ப பேசவும் மாட்டார். மகா பெரியவர் பூஜை பண்றதை தரிசிக்க வந்த கூட்டம் கூடம் முழுக்க நிரம்பி வழிஞ்சுது.
வழக்கப்படியான ஆராதனைகளை செய்து கொண்டு இருந்தார் மகா பெரியவர். பார்க்க வந்திருந்த பக்தர் கூட்டத்துல ஒரு பாட்டி தன்னோட பேத்தி கூட தொலைவில் ஒரு மூலையில உட்கார்ந்து இருந்தாங்க. பெரியவா பூஜை பண்றதை பார்த்துக்கிட்டு இருந்த சமயத்துல அந்தப் பாட்டி தன் பேத்தி கிட்ட ஏதோ சொல்றதும், அந்தக் குழந்தை, “ஊஹூம்!, முடியாது… இப்பவே!”ன்னு சொல்லி அடம் பிடிக்கறதுமாக இருந்ததை எல்லாரும் பார்த்தாங்க.
குழந்தை வீட்டுக்குப் போகத்தான் அடம் பிடிக்குது. பாட்டி சமாதானப்படுத்தறாங்கன்னு எல்லாரும் நினைச்சாங்க. ஆனா, கொஞ்ச நேரத்துல அந்தக் குழந்தை, “அதோ அந்தப் பொண்ணு கட்டிண்டு இருக்கற மாதிரி எனக்கும் பச்சைப் பட்டுப் பாவாடை வேணும்..!”னு கேட்டு அழறது எல்லாருக்கும் சத்தமாகவே கேட்டுச்சு.
பாட்டி எவ்வளவு சமாதானப்படுத்திப் பார்த்தும் குழந்தை அடம் பிடிக்கறதை நிறுத்தவே இல்லை. எல்லாரும் தலையைத் திருப்பித் திருப்பிப் பார்க்கிறார்கள். குழந்தை சமாதானம் ஆகிற மாதிரியும் தெரியலை. எந்தக் குழந்தையோட பட்டுப் பாவாடையைப் பார்த்து அப்படிக் கேட்குதுன்னும் புரியலை.
அந்த சமயத்துல யாருமே எதிர்பார்க்காத ஒரு விஷயத்தைப் பண்ணினார் மகா பெரியவர்.
செய்துகிட்டு இருந்த பூஜையை நிறுத்தி விட்டு, அந்தப் பாட்டியை சைகையால கிட்ட கூப்பிட்டார்.
எல்லாரும் இப்போ அந்தப் பாட்டியையும் பேத்தியையுமே பார்த்தாங்க. பூஜைக்கு இடைஞ்சல் பண்றத்துக்காக கண்டிக்கப் போறார், வெளியில போகச் சொல்லப் போறார், இப்படி ஆளுக்கு ஒரு மாதிரி நினைக்கத் தொடங்கினாங்க.
பாட்டி கூச்சத்தோட நெளிஞ்சுகிட்டே பெரியவா முன்னால வந்தாங்க. அன்போட அவர்களைப் பார்த்த பெரியவர், ஆசீர்வாதம் செய்யற மாதிரி கையாலே ஜாடை காண்பிச்சார்.
அதுக்கப்புறம் மடத்து சிப்பந்தி ஒருத்தரை ஜாடையால கூப்பிட்டு, குழந்தை கேட்கிற மாதிரி ஒரு பாவாடையைக் கொண்டு வரும்படி ஜாடையாலேயே சொன்னார்.
இப்போ மாதிரி, ரெடிமேடா பட்டுப் பாவாடை எல்லாம் கிடைக்காத காலகட்டம் அது. அதுலயும் கண்டிப்பா அஹிம்சா பட்டு தான் உபயோகப்படுத்தணும்கறது பெரியவாளோட கட்டளை. இப்படிப்பட்ட சமயத்துல எங்கே இருந்து அப்படி ஒரு பட்டுப் பாவடையை வாங்கிட்டு வர்றதுன்னு குழம்பினார் மடத்து சிப்பந்தி.
ஆனா, சொல்லி வைச்ச மாதிரி, மடத்துக்குப் பக்கத்துல இருந்த கடையிலேயே அந்தக் குழந்தைக்கே அளவு எடுத்துத் தைச்சு வைச்ச மாதிரி பச்சைக் கலர்ல ஒரு பட்டுப் பாவாடை கிடைச்சுது.
வாங்கிட்டு வந்து தந்ததும், அந்தப் பாவாடையை குழந்தைக்கு கட்டிவிடும்படி ஜாடையாவே சொன்ன பெரியவர், அவளை அப்படியே மணையில் உட்கார வைச்சு கன்யா பூஜை பண்ண ஆரம்பிச்சுட்டார்.
எல்லாருக்கும் ஆச்சரியம். பாட்டிக்கு நெகிழ்ச்சி. குழந்தைக்கு பச்சைப் பட்டுப்பாவாடை கிடைச்ச சந்தோஷம். இப்படி எல்லாமும் சேர்ந்து அன்றைய பூஜை ஆனந்தமா நிறைவடைஞ்சது.
இது நடந்து ஒரு மாதத்துக்கு அப்புறம் மடத்துக்கு அழுதுகிட்டே வந்தாங்க அந்தப் பாட்டி. தன்னோட பேத்தி இறந்துட்டதா சொன்னாங்க.
மகா பெரியவர் கொஞ்சமும் சலனம் இல்லாம, அந்தப் பாட்டியைப் பார்த்தார். “அன்னிக்கு நான் சந்திரமௌலீஸ்வர பூஜை பண்ணினபோது, பச்சைப் பட்டுப் பாவாடை கட்டிண்டு இருந்த இன்னொரு குழந்தை இருக்கறதா உன் பேத்தி சொன்னாளே நினைவிருக்கா ? மற்ற யாருக்குமே அப்படி ஒரு குழந்தை இருந்ததாகவே தெரியாதபோது, அவமட்டும் எப்படிப் பார்த்தா ?” என்று கேட்டார்.
திருதிருன்னு விழிச்சாங்க பாட்டி. சுத்தி இருந்த எல்லாரும், பெரியவர் ஏதோ சொல்லப் போறார்னு ஆச்சர்யமா பார்த்தாங்க.
“நான் பூஜை செய்தப்ப, அம்பிகை பாலா வந்து என் மடியில உட்கார்ந்து தானும் சேர்ந்து சிவனுக்கு அர்ச்சனை செய்துகிட்டு இருந்தா. அவளைத்தான் உன் பேத்தி பார்த்திருக்கா. பாலாம்பிகை கட்டிக்கிட்டு இருந்த மாதிரியே தனக்கும் பாவாடை வேணும்னு கேட்டிருக்கா.
தெய்வத்தையே நேரடியா தரிசனம் பண்ணின உன் பேத்தி மகா புண்ணியம் பண்ணினவ. அவ நேரடியா மோட்சத்துக்கே போயிட்டா…! அதனால கவலையேபடாதேம்மா…!”
அமைதியாகச் சொன்னார் மகா பெரியவர். அம்பிகையே அவர் பூஜை செய்யும்போது நேரில் வருகிறாள். குழந்தையாக அவர் மடியிலேயே அமர்ந்து தானும் சிவ பூஜை செய்கிறாள்
-என்றால், அவர் எத்துணை பெரிய மகான்!