Friday 28 February 2020

"உங்கிட்ட இருக்கிற பணத்துக்கு நீ டிரஸ்டி, அவ்வளவுதான்,சொந்தக்காரன்னு நினைச்சுக்காதே.."(கஞ்ச மகா பிரபுக்கு கருணை காட்டிய சம்பவம்)

"உங்கிட்ட இருக்கிற பணத்துக்கு நீ டிரஸ்டி, அவ்வளவுதான்,சொந்தக்காரன்னு நினைச்சுக்காதே.."(கஞ்ச மகா பிரபுக்கு கருணை காட்டிய சம்பவம்)


(பெரியவா,ஒரு ஸ்பெஷலிஸ்ட் - எல்லா நோய்களுக்கும், "நோய் நாடி,நோய் முதல் நாடி" நோயாளிகளின் உள்ளமும் நாடி, அதற்கேற்ற மருந்து கொடுப்பார்கள்)
.சொன்னவர்;ஓர் அணுக்கத் தொண்டர் ஸ்ரீமடம்

தொகுத்தவர்;டிஎஸ்.கோதண்டராம சர்மா


தட்டச்சு;வரகூரான் நாராயணன்.
.


பிரபு என்று எவரையாவது சொல்ல வேண்டுமென்றால் இவரைத்தான் சொல்ல வேண்டும்.
கஞ்ச மகா பிரபு!
காசுக்குப் பஞ்சமில்லை,செலவழிக்க,அனுபவிக்க மனம்தான் இல்லை.
பெரியவாள் தரிசனத்துக்கு வந்தார்.
வலதுகையால் வாயை மறைத்துக்கொண்டு உருக்கமாகச் சொல்ல ஆரம்பித்தார்.
"எனக்கு ரத்த அழுத்தம்,டயாபடீஸ் இரண்டும் ரொம்ப நாளா இருக்கு.இப்ப கன்ஸர் வேறே வந்திருக்கு. ரொம்பக் கஷ்டமா இருக்கு. பெரியவா பரிஹாரம் சொல்லணும்..."
"நான் சொன்னால் சொன்னபடி செய்வாயா?"
"செய்யறேன்."
"ரொம்பக் கஷ்டமா இருக்குமே.."
"இருக்கட்டும். வியாதி நீங்கினால் போதும்.... பெரியவா என்ன உத்திரவு போட்டாலும்,அதன்படி நடக்கிறேன்.....ப்ளட்பிரஷர்,கான்ஸர்,ஷூகர்-எல்லாம் என்னை விட்டுவிட்டுப் போனால் போதும்..." என்று சொல்லி விட்டுக் கண்களைத் துடைத்துக் கொண்டார்.
பொதுவாகவே, அவ்யாஜ கருணை (காரணமில்லாத கருணை) பெரியவாளுக்கு.இவரோ கண்ணீர் விட்டு சரணாகதி பண்ணுகிறார். கைவிட முடியுமா?
பெரியவாள் சொன்னார்கள்.
1) கிணற்றில் தண்ணிர் இருக்கு.'தண்ணீர் என்னுடையதுதானே' என்று சொந்தம் கொண்டாடி, கிணறே தண்ணிரைக் குடித்து விடுவதில்லை.
2)மரத்தில் பழம் பழுக்கிறது.'என் மரத்துப் பழம்; நான்தான் சாப்பிடுவேன்' என்று மரம் பழங்களைச் சாப்பிடுவதில்லை.
3)பசுமாடு பால் கொடுக்கிறது; பசுமாடு பால் குடிப்பதில்லை.
4)எத்தனையோ செடி-கொடிகள், காய் காய்க்கின்றன ஒரு காயைக்கூட -அவைகள் தமக்கு என்று வைத்துக்
கொள்வதில்லை.
-இப்படி ஓரறிவு-ஈரறிவு படைத்த பிராணிகளே கூட, பரோபகாரம் செய்கின்றன.மனிதனுக்கு ஆறறிவு
என்கிறார்கள்.அவன் மற்றவர்களுக்கு எவ்வளவு உபகாரம் செய்யணும்?"
"உன்னிடம் பணம் இருக்கு. நீயும் சரியாக அனுபவிக்கல்லே,பரோபகாரம்-தர்மம் செய்யல்லே.
"போன ஜன்மத்துப் பாவங்கள் ஒன்று சேர்ந்து வியாதியாக வந்து உன்னைப் படுத்துகிறது. பாவம் போகணுமானால் தான-தர்மம் செய்யணும்."
"இஷ்டா-பூர்த்தம்னு தர்ம கார்யம் தெரியுமோ? குளம் வெட்டுவது,கோயில் திருப்பணி, ஏழைகளுக்குஉதவி,சொந்தக்காரர்களுக்கு உதவி-இப்படி,நல்ல காரியங்களிலே பணத்தைச் செலவிடணும். அப்புறம்... வியாதிகளால் கஷ்டப்படுகிற அநாதைகளுக்கு மருந்து வாங்கிக்கொடு. அம்மா,அம்மான்னு ஒருத்தன் கை நீட்டினால்,அவன் வெறுங்கையோட போகப்படாது என்ன?
"உங்கிட்ட இருக்கிற பணத்துக்கு நீ,டிரஸ்டி, அவ்வளவுதான்.சொந்தக்காரன்னு நினைச்சுக்காதே..."
கஞ்ச மகாப்பிரபு குலுங்கிக் குலுங்கி அழுதார், பின்னர் கர்ண மகாப்ப்ரபுவாக நெடுங்காலம் ஜீவித்திருந்தார்.
பெரியவா,ஒரு ஸ்பெஷலிஸ்ட்- எல்லா நோய்களுக்கும் "நோய் நாடி,நோய் முதல் நாடி," நோயாளிகளின் உள்ளமும் நாடி அதற்கேற்ற மருந்து கொடுப்பார்கள்

No comments:

Post a Comment