Thursday 6 February 2020

"ராமா ராமா என்று சொன்னேன்.அதைச் சொன்னால் என் பிரச்னை தீர்ந்துவிடுமா?"


ராமா ராமா என்று சொன்னேன்.அதைச் சொன்னால் என் பிரச்னை தீர்ந்துவிடுமா?"
(பிரச்னைக்கு தீர்வும், விளக்கமும் சொன்ன பெரியவா)

(ஏன் நமக்கும்தான்)
கட்டுரையாளர்-வெ,ஸ்ரீராம்
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
நன்றி- குமுதம் லைஃப்
(இன்று வந்த -இதழ்) 05-02-2020.

விசேஷ நாள் ஒன்றில் ஸ்ரீமடத்திற்கு மகானை தரிசிக்க பெரும் கூட்டம் வந்திருந்தது.

அப்போது அவர் சந்திரமௌலீஸ்வர பூஜை செய்து கொண்டிருந்ததால், வந்திருந்த பக்தர்கள் அனைவரும் அமைதியாக நின்றும் அமர்ந்தும் ஜயஜய சங்கர கோஷத்தை மென்மையாக சொல்லிக் கொண்டிருந்தார்கள்

அப்போதுதான் வந்திருந்த பக்தர் ஒருவர், பக்தர் கூட்டத்துக்கு இடையே புகுந்து,முன்னேறுவதற்காக முண்டியடித்துக் கொண்டிருந்தார்.வழிவிட மறுத்தவர்களுக்கும் அவருக்கும் இடையேலான பேச்சுதான் ரகளையாகிக் கொண்டிருந்தது.

மடத்துத் தொண்டர்கள் அவசரமாகச் சென்று அந்த நபரைத் தடுத்து, மகான் பூஜை செய்வதையும்,அதன் பிறகு அவர் தரிசனம் தர அமரும்போது,வரிசையில்தான் செல்ல வேண்டும் என்று உறுதியாகச் சொன்னார்கள். வேறு வழியில்லாமல் முணுமுணுத்தபடியே நின்று கொண்டிருந்தார்,அந்த நபர்.

நேரம் நகர்ந்தது.பூஜையை முடித்து, தீர்த்தப் பிரசாதம் தந்துவிட்டு,வழக்கமாக பக்தர்களுக்கு தரிசனம் தரும் இடத்தில் வந்து அமர்ந்தார் மகாபெரியவா

மறுபடியும் அந்த பக்தரின் தொல்லை தொடங்கியது. இந்த முறை அது கொஞ்சம் அதிகமாகவே கேட்கவே, "அங்கே என்ன? என்பதுபோல் அணுக்கத் தொண்டரைப் பார்த்து, சைகையால் .கேட்டார் மகான்

வேகமாக மகான் முன் வந்து நின்றவர்,பெரியவா எதுவும் கேட்பச்தற்கு முன்பாக அவராகவே பேசத் தொடங்கினார்.

"சுவாமி எனக்கு ஏகப்பட்ட...". என்று ஆரம்பித்தவரை,அதற்கு மேல் சொல்லவிடாமல் தடுத்தது, நிறுத்து என்பதுபோல் மகான் காட்டிய சைகை

"முதல்லே கொஞ்ச நேரம் அமைதியா அதோ அங்கே போய் உட்காரு. வீணா முணுமுணுக்காம ராம நாமத்தைச் சொல்லு. நானே கூப்பிடறேன்!" மகான் கனிவு கலந்த கட்டளையாகச் சொல்ல அப்படியே சென்று அமர்ந்தார் அவர்.

வரிசை நகர்ந்து கொண்டே இருந்தது.வரிசையில் நின்று வந்திருந்தால்,அவரது முறை எப்போது வருமோ, சரியாக அதே சமயத்தில் அவரை விரல் சொடுக்கி அழைத்தார் மகான்.

"சுவாமி எனக்கு வீட்டுல வறுமை. ஆபீஸ்ல நிம்மதி இல்லை.வெளியிடத்துல கடன்.இப்படி ஏகப்பட்ட பிரச்னை வாட்டுது. ஒண்ணு முடிஞ்சதாக நினைச்சாலும் உடனே அடுத்தது தொடங்கிடது. என்னால் இந்த சங்கடங்களைத் தாங்கவே முடியவில்லை.மண்டையே வெடிச்சுடும் போல இருக்கு.எனக்கு நீங்கதான் ஒரு தீர்வு சொல்லணும்!" சொன்னார் வந்தவர். .

அமைதியாக அவரை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்த மகான்."இவ்வளவு நேரம் ஓரமா உட்கார்ந்துண்டு என்ன செய்தாயோ,அதையே தினமும் அரை மணி நேரம் பண்ணு.பிரச்னை தீர்ந்துடும்!" சொன்னார்.

பெரியவா சொன்னதும் கொஞ்சமும் யோசிக்காமல்,"இங்கே உட்கார்ந்து என்ன செஞ்சேன்? ராமா ராமா என்று சொன்னேன்.அதைச் சொன்னால் என் பிரச்னை தீர்ந்துவிடுமா? கேட்பது மகானிடம் என்பதை மறந்து கேட்டார் வந்தவர்

கொஞ்சமும் கோபம் இல்லாமல், அவரைப் பார்த்த மகான்,"உன்கிட்டே ஒரு கேள்வி. ராம நாமம் சொல்லும் இடத்துக்கெல்லாம் கண்ணுக்குத் தெரியாம ஓருத்தர் வந்து நிற்பாராமே.அது யார் தெரியுமா? கேட்டார்

"தெரியும்..அனுமான்" .

"அந்த அனுமான் யார் அவதாரம் தெரியுமா? சிவன் அம்சம்.சிவன் அங்கே வந்து நின்றால்,அம்பாள் உடனே வந்துவிடுவாள். அம்பாள் வந்தால் அவர்களின் குழந்தைகள் முருகனும்,கணபதியும் ஆஜராகிவிடுவார்கள். சிவகுடும்பம் உள்ள இடத்தில் மங்களம் நிறையும்.அதனால் மகாலக்ஷ்மி வருவாள் அவள் வந்தால் மகாவிஷ்ணுவும் வந்துவிடுவார் இப்படி அங்கே எல்லா தெய்வங்களும் வந்துவிட்டால், அங்கே சந்தோஷம் தானாக நிறைந்துவிடும் அல்லவா? அதனால்தான் உன்னை ராமநாமம் சொல்லச் சொன்னேன்.புரிந்ததா?"

மகான் சொல்ல மன நிறைவோடு அவரை வணங்கி பிரசாதம் பெற்றுக் கொண்டு புறப்பட்டார் அந்த நபர்..

ராமநாமம் சொல்லு என்று மகான் சொன்னதும், அந்த மனிதர் அதை ஏன் சொல்ல வேண்டும் என்று கேட்டது,மகானின் எண்ணப்படியே நடந்தது என்பதும், அவனாகக் கேட்கவைத்து,அதற்கு பதில் சொல்லும் விதமாக,ராமநாமத்தின் பெருமையை எல்லோருக்கும் புரிய வைக்க வேண்டும் என்பதற்காக மகானே நடத்திய திருவிளையாடல் என்பதும் தேவரகசியம்.

No comments:

Post a Comment