Thursday 5 March 2020

“போயி, ஒரு பட்டுப்பொடவையும், அதோட….. ஒரு ரவிக்கை துணியும் கொண்டா….”



போயி, ஒரு பட்டுப்பொடவையும், அதோட….. ஒரு ரவிக்கை துணியும் கொண்டா….”

ஒருமுறை_பெரியவா ஆந்த்ராவில்_முகாம்
அந்த ஸமயம், ஶ்ரீ சந்த்ரமௌளீஶ்வரர் பூஜை மற்றும் மடத்துப் பொறுப்பிலிருந்து, பெரியவா…. முழுவதுமாக விலகிக் கொண்டு விட்டார். எனவே, பாத யாத்ரையாகப் போகும்போது, தன்னுடன் ஒரு சின்ன காமாக்ஷி அம்மன் விக்ரஹத்தை வைத்துக் கொண்டு, அவளுக்கு பூஜை பண்ணுவார்.

அதேபோல் ஒருநாள்… தன்னுடைய காமாக்ஷிக்கு பூஜை பண்ண ஆரம்பித்தார்.
பூஜையை ஆரம்பித்ததும், சொல்லி வைத்தாற்போல், ஸரியாக அந்த நேரத்தில், எங்கிருந்தோ ஒரு பெண் வந்தாள்!
பார்த்தாலே மஹா ஏழை என்று தெரிந்தது! உடலைச் சுற்றி…ஒரு பழைய கந்தல் புடவை, அதுவும் இடது முழங்காலுக்கு மேலே கொஞ்சம் பெருஸாகவே கிழிந்திருந்தது.
வந்தவளோ….. “எனக்கு பொடவை குடு.!. பொடவை குடு…!” என்று ஏகமாக ஶப்தம் போட்டு, கூவி ரகளை செய்தாள்.
“பூஜை ஸமயத்ல வந்து…. இப்டிக் கத்தி ஊரைக் கூட்றாளே!”
“இந்தாம்மா! இப்டில்லாம் கத்தக்கூடாது!…….. போய்ட்டு அப்றமா வா! ”
அவள் ஏதோ…. ஸாப்பாட்டுக்கு பறக்கிறாள் என்று எண்ணி, ஶிஷ்யர்கள் அவளை விரட்ட ஆரம்பித்தனர்.
“எனக்கு பொடவை குடு……. பொடவை!…”
ஶிஷ்யர்களை அவள் லக்ஷ்யமே செய்யவில்லை! பெரியவாளையே பார்த்துக் கத்திக் கொண்டிருந்தாள்.
பூஜை பண்ணிக் கொண்டிருந்த பெரியவா, அமைதியாக கொஞ்ச நேரம் அவளை பார்த்தார்.
ஶிஷ்யரை அழைத்தார்….
“போயி, ஒரு பட்டுப்பொடவையும், அதோட….. ஒரு ரவிக்கை துணியும் கொண்டா….”
ஶிஷ்யர் கொண்டு வந்ததும், அதை ஒரு தட்டில் பழங்களோடு வைத்து அவளிடம் கொடுத்தார்.
பழத்தையோ.. வேறு எதையுமே தொடாமல், புடவையை மட்டும் எடுத்துக் கொண்ட அந்தப் பெண், படுவேகமாக போய் விட்டாள்.
இதையெல்லாம் தள்ளி நின்று பார்த்துக் கொண்டிருந்த ஒரு ஶிஷ்யருக்கு மனஸில் ஏதோ பொறிதட்ட, யாரிடமும் சொல்லாமல், விடுவிடுவென்று அவள் பின்னாலேயே வேகமாக போனார்.
அமானுஷ்ய வேகத்தில் அவள் என்னமோ…. நடப்பது போலிருந்தாலும், இவரோ வேகமாக ஓடினார்.
நிறைய மரங்களடர்ந்த வனப்ரதேஸம் போல் வந்ததும், முன்னால் போனவளை திடீரென்று காணவில்லை!
இவர் சுத்தி சுத்தி தேடும் போது, அவருடைய கன்னத்தில் “பளீர் பளீர்” ரென்று யாரோ அறைந்தது போலிருந்தது.
அங்கேயே மயங்கி விழுந்தவர் கொஞ்ச நேரம் கழித்து, எழுந்து தட்டிவிட்டுக் கொண்டு, எப்படியோ பெரியவாளிடம் வந்து சேர்ந்தார்.
உள்ளே நுழைந்தவரைப் பார்த்த பெரியவா சிரித்துக் கொண்டே 'அடி-நலன்' விஜாரித்தார்.....
“என்னடா? பொடவை என்னாச்சுன்னு பாக்க போனியோ? நன்னா…. பளீர்னு…. வாங்கினியா? ”
குரலில் கிண்டல்……
பேந்தப் பேந்த முழித்தார் ஶிஷ்யர்.
"வந்தவ……….. ஸாக்ஷாத் அம்பாள்டா!… மடையா!”
“என்னது?….”
தன் முன்னே வைத்திருந்த தன்னுடைய அம்பாள் விக்ரஹத்தை காட்டினார்.
“பாரு! வந்தவளோட பொடவை எங்கெல்லாம் கிழிஞ்சிருந்ததோ, அதே மாதிரி… இந்த அம்பாளுக்கும் பொடவை-ல கிழிஞ்சிருக்கு பாரு!”
தனக்கு தேவையானதை பெரியவாளிடமே நேரிலேயே வந்து, மிரட்டி உருட்டியாவது, ஸ்வாதீனமாக கேட்டு பெறுவதை அம்பாள் கடைப்பிடித்து வந்திருக்கிறாள்!
ஶ்ரீ ஆசார்யாள் பாதங்களில் ஸமர்ப்பணம்

No comments:

Post a Comment