Tuesday 3 December 2019

ஸ்ரீ ருத்ரத்தின் இறுதியில், மஹாம்ருத்யுஞ்சய மந்த்ரம் வரும். மிகப் பிரபலமானது.


ஸ்ரீ ருத்ரத்தின் இறுதியில், மஹாம்ருத்யுஞ்சய மந்த்ரம் வரும். மிகப் பிரபலமானது.

"த்ரயம்பகம்யஜாமஹே
ஸுகந்திம்
புஷ்டிவர்தனம்.
உர்வாருகமிவ
பந்தனாத்ம்ருத்யோர்
முக்க்ஷீயமாம்ருதாத்."

இதில்' உர்வாருகமிவ பந்தனாத்முக்க்ஷீய' என்ற வரிகளின் அர்த்தம், 'வெள்ளரிப்பழம் அதன் கொடியிலிருந்து விடுபடுவது போல, என் பந்தங்களிலிருந்து நான் விடுபட வேண்டும்' என்பதாக அமையும். எனக்கு வெகு நாட்களாக ஒரு சந்தேகம். எந்தப் பழமாயிருந்தாலும், பழுத்தவுடன், 'பட்'டென்று தன் கொடி, செடி அல்லது மரத்திலிருந்து அறுந்து விழுந்து விடும்தானே! இதில் வெள்ளரிப்பழத்தை மட்டும் ஏன் இந்த மந்திரத்தில் குறிப்பிட்டு சொல்லப்பட்டிருக்கிறது என்று. பல வேத விற்பன்னர்களிடம் கேட்டும் த்ருப்தியான பதில் கிடைக்கவில்லை.

பின்ஒருமுறை, மஹா பெரியவா இதற்கு ஒரு அற்புதமான விளக்கம் அளித்திருந்ததைப் படிக்க நேர்ந்தது. அதாவது, மற்ற பழங்கள் போல் அல்லாமல், வெள்ளரிப்பழம் கொடியில் பூத்துக் காய்த்துப் பழுக்கும். வெள்ளரிக் கொடி, தரையோடு தரையாய்ப் படரும். அதனால், வெள்ளரிப் பழமும், தரைத் தளத்திலேயே பழுத்துக் கிடக்கும். அது பழுத்தவுடன், அதைச் சுற்றியுள்ள கொடியின் கிளைகள், இலைகள் போன்றவை தன்னால் அந்தப் பழத்தை விட்டு விலகுமாம். அதாவது, பழம் கொடியிலிருந்து உதிர்வதில்லை. கொடிதான் பழத்தை விட்டு விலகுகிறது.

அது போல, ஞானிகளுக்கு, அவர்கள் பந்தம், பற்றை விட்டு விலக வேண்டுமென்பதில்லை. சரியான தருணத்தில், 'இவர் பழுத்துவிட்டார்' எனத் தெரிந்தால், பந்தம், பற்று போன்றவை அவரை விட்டு தாமாகவே – எப்படி வெள்ளரிக் கொடி தன் பழத்தை விட்டு விலகுகிறதோ, அது போல - விலகிவிடுமாம்.

அற்புதமானவிளக்கம்.

நமது மந்திரங்களின் ஆழமான கருத்தும் புரிந்து கொள்ள நேர்ந்தது.

மஹாபெரியவாசரணம்.

No comments:

Post a Comment