Monday 17 February 2020

"எனக்கு ரெண்டே ஆசைங்க- பெரியவாளிடம் தெலுங்கு சிறுவன் புரந்தர கேசவலு"


"எனக்கு ரெண்டே ஆசைங்க- பெரியவாளிடம் தெலுங்கு சிறுவன் புரந்தர கேசவலு"

(பூஜைக்கு வில்வம் தந்த புரந்தரன்); (புரந்தரனுக்கு மோட்சம் தந்த மஹா பெரியவா!)
கட்டுரை ஆசிரியர்-ரமணி அண்ணா-2012 பதிவு
நன்றி-சக்தி விகடன்
.மஹா பெரியவா ஆந்திர மாநிலத்தில் விஜய யாத்திரை மேற்கொண்டிருந்த சமயம். பெரியவா ஓர் ஊரில் இருந்து மற்றோர் ஊருக்குச் செல்லும் வழியில், திடீரென்று மழை பிடித்துக்கொண்டது. மஹானுடன் சென்றவர்கள், ''பெரியவா, மழை பெய்யுது. பல்லக்கிலே ஏறிண்டுங்கோ பெரியவா'' என்றனர். அதற்கு மஹா பெரியவா,' அதெப்படி? இத்தனைபேர் மழையிலே நனைஞ்சுண்டு நடந்து வரும்போது நான் சிவிகையிலா? 'ஹூம் ஹூம் நானும் நடந்தே வரேன்' என பெரியவர் சொல்லி விட்டார்..மேற்கொண்டு நடக்க முடியாதபடி மழை பலத்தது.
அருகில் இருந்த கிராம எல்லையில் ஒரு பழைய சிவன் கோயில் தெரிந்தது. ஸ்வாமிகள் அங்கே தங்கி மழையில் நனைந்த காவி வஸ்திரத்தை மாற்றிக்கொண்டார். ஸ்வாமிகள் அங்கே தங்கி இருக்கும் விஷயம் ஊரில் இருந்தவர்களுக்குத் தெரிந்தது. அனைவரும் ஸ்வாமிகளை பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்று வணங்கினர். அனைவருக்கும் ஆசி வழங்கிவிட்டு ஸ்வாமிகள் தம்முடைய யாத்திரையைத் தொடர்ந்தார்
.

சுமார் எட்டு மைல்கள் சென்றதும் ஒரு கிராமம் வந்தது. அந்த கிராமத்தின் ஜமீன்தார் விஷயம் கேட்டு ஓடிவந்தார். கிராமமே அவரை சூழ்ந்து
கொண்டு தங்கள் கிராமத்தில் பெரியவா தங்கி அருள் செய்ய பிரார்த்தித்துக் கொண்டார்கள். பெரியவாளுக்கு என்ன தோன்றியதோ? இங்கு 21 நாள் இருக்கபோறேன் என்று அறிவித்தார். ஊரில் சத்திரம் ரெடி பண்ணப்பட்டது. பக்தர்களுக்காக விறு விறுவென்று கொட்டகையும் போடப்பட்டது.

.மறுநாள் காலையில் பெரியவா ஸ்நானத்துக்குச் சென்றுவிட்டார். அவர் திரும்பியதும் பூஜைக்கு உட்கார்ந்துவிடுவார். ஆனால், பூஜைக்குத் தேவையான வில்வம் எங்குமே கிராமத்தில் எங்குமே கிடைக்கவில்லை. மடத்து காரியதரிசிக்கு ஒரே கவலையாகப் போய்விட்டது. வில்வம் இருந்தால்தான் பூஜை நடக்கும். பூஜை முடிந்தால்தான் பெரியவா பிக்ஷை ஏற்பார். இதில் வேறு பெரியவா 21 நாள் இந்த கிராமத்தில் தங்கப்போவதாகச் சொல்லி இருக்கிறாரே என்ற கவலை வேறு அவருக்கு ஏற்பட்டது. பெரியவா பூஜைப் பொருட்களைப் பார்த்துவிட்டு 'வில்வம் இல்லையா?' என்று கேட்டார். கண்ணில் ஜலம் வழிய காரியஸ்தர் 'பெரியவா, ஜமீன்தார் எல்லா ஆட்களையும் அனுப்பியிருக்கார். வந்துடும்' என்றார். பெரியவா பேசாமல் சத்திரத்துக்கு பின்னால் மாட்டு தொழுவத்தருகில் ஒரு கல் பாறையில் தியானம் பண்ண அமர்ந்துவிட்டார்.
பதினொன்றரை மணியிருக்கும். இன்னும் வில்வம் வரவில்லை. 'சரி இன்று சந்திர மௌலீஸ்வரருக்கு பூஜையோ, பெரியவாளுக்கு பிக்ஷையோ இல்லைபோலிருக்கே. இன்னும் இருபது நாள் வேறு இங்கு இருக்கணுமே' என்று காரியதரிசி பிரமை பிடித்தவர்போல் நின்றுகொண்டு இருந்தார்.
.தியானம் பண்ணிகொண்டிருந்த பெரியவா கண் திறந்தா ஒரு சிறு புன்னகை.. மடத்தில் பூஜா கைங்கர்யம் செய்துவரும் ஒரு பையன் ஓடிவந்தான். தலையிலே ஒரு பெரிய கூடை பச்சை பசேலென்று நிறைய மூணு தள வில்வம்! பெரியவாளுக்கு சந்தோஷம். ''வில்வமே கிடைக்காதுன்னு சொன்னாளே எப்படி கிடைச்சுது??.'யார் இவ்வளவு ஸ்ரத்தையா வில்வதளம் பின்னமாகாமல் பறிச்சிருக்கா?. வில்வம்தான் வந்துடுத்தே பூஜை ஆரம்பிப்போம்'' என்று பெரியவா சொல்லி, சாஸ்த்ரோக்தமா பூஜா நடந்து எல்லாருக்கும் பிரசாதமும் வழங்கி விட்டார். ''யார் வில்வம் கொண்டுவந்தாளோ அவாளை கூப்பிடுங்கோ பிரசாதம் வாங்கிக்கட்டும்'' என்று பெரியவா சொன்னபோது ஸ்ரீ கார்யம் நடுங்கிக்கொண்டே 'பெரியவா, இது யார்கொண்டுவந்ததுன்னே தெரியலே கீழண்டை வாசலிலே மண்டபத்து ஓரத்திலே மறைவா ஒரு திண்ணையிலே இந்தக் கூடை இருந்தது. யார் வச்சதுன்னே தெரியலே.'
'ஒருக்கால் சந்திர மௌலீஸ்வரரே தன்னுடைய பூஜைக்கு எடுத்துண்டு வந்திருக்கலாம்'' என்று பெரியவா சிரிச்சுண்டே சொன்னா. அன்று முழுதும் கோலாகலமா பூஜை, பிரவசனம் எல்லாம் நடந்தது. ஊர் ஜனங்களுக்கு பரம சந்தோஷம். மறுநாள் காலை காரியதரிசி அந்தப் பையனிடம், ''அப்பனே, இன்னிக்கும் மண்டப மூலையில வில்வம் இருக்கா பாரேன்' என்றார். என்ன ஆச்சர்யம்? முந்தின தினம் போலவே அங்கே ஒரு கூடை நிறைய வில்வம் இருந்தது.
வில்வத்தைப் பார்த்த பெரியவா அர்த்தபுஷ்டியுடன் காரியதரிசியைப் பார்த்தார். 'ஆமாம்! பெரியவா இன்னிக்கும் யாரோ கொண்டு வச்ச வில்வக்கூடை தான் இது. “யார் இப்படி ரகசியமா கொண்டு வக்கிறான்னு கண்டுபிடி. நாளைக்கு விடிகாலம்பர முதல்ல நீ கண்காணி. அந்த ஆசாமியை கையோட எங்கிட்ட அழைச்சுண்டு வா''. என்று மகா பெரியவா உத்தரவு பிறப்பித்தார். மறுநாள் அதிகாலையிலயே காரியதரிசி மண்டபத்து ஓரம் மறைந்துகொண்டு வில்வம் யார் கொண்டுவந்து வைக்கிறார்கள் என்று காத்திருந்தபோது எட்டரை மணி சுமாருக்கு ஒரு தெலுங்கு பையன் தலையிலே கட்டு குடுமி அழுக்குவேஷ்டி மூலகச்சம் தலையிலே ஒரு கூடையில் வில்வம் எடுத்துவந்து வழக்கம் போல பந்தக்கால் அருகேவைத்துவிட்டு திரும்பும்போது எதிரே ஸ்ரீ கார்யம் வழி மறித்து நின்றார். பையன் ஸ்ரீ கார்யம் காலில் விழுந்துவணங்கினான்..ஸ்ரீ கார்யம் அரை குறை தெலுங்கிலே 'போய் குளிச்சுட்டு தலையை முடிஞ்சுண்டு நெத்திக்கு ஏதாவது இட்டுண்டு துவைத்த வேஷ்டி வஸ்த்ரத்தொடு, மத்யானம் வா சாமிகிட்டே அழைச்சுண்டு போறேன்''.என்றார். பையன் தலையாட்டிவிட்டு நழுவினான். மூணுமணி சுமாருக்கு வெள்ளை வேஷ்டி நெத்தி பூரா விபூதியும், எண்ணெய் வழிய தலை வாரி குடுமி முடிஞ்சுண்டு பயபக்தியோடு அந்த பையன் மெதுவா உள்ளே நுழைந்தான்.
எதையோ தேடிக்கொண்டிருந்த பெரியவா விழிகள் அந்த பையனை பார்த்தவுடன் மலர்ந்தது. நமஸ்காரம் பண்ணி ஓரமா நின்ற பையனை அருகே அழைத்தார்.
'நீ யாரப்பா உன்னோடைய பேர் என்ன?
'புரந்தர கேசவலு''ங்கய்யா.
'தமிழ் பேசறியே எப்படி?'
'அய்யா, எங்கப்பாதாங்க சொல்லி கொடுத்தாங்க. அம்மா ரெண்டு வயசிலேயே போயிட்டாங்க. நாங்கல்லாம் மதுரைபக்கம் உசிலம்பட்டிங்க. அப்பாரு பொழைப்புக்கு இங்க எனக்கு ஆறு வயசு இருக்கும்போது கூட்டியாந்தாரு. ஜமீன்லே மாடு மேக்கற வேலை. பள்ளிக்கூடம் போகலே. அப்பாரு பாட்டுன்னா உயிரையே விட்டுடுவாரு. தியாகராஜ சாமி பாட்டு புரந்தரதாசரு பாட்டு எல்லாம் பாடுவாரு. எனக்கும் சொல்லி குடுத்தாரு. இப்ப இல்லீங்க ரெண்டு வருஷம் முன்னாலே போயிட்டாரு. நான்தான் இப்ப ஜமீன்லே மாடு மேக்கறேன். பன்னண்டு வயசுங்க இப்போ''.
''அது சரி. இந்த ஊர்லே வில்வம் கிடையாதாமே; உனக்கு மட்டும் எப்படி எங்கே கிடைச்சுது?'
'நாலு கல்லு தாண்டி மலை அடிவாரத்துலே மாடு மேய்க்கும்போது ஒருதடவை அப்பாரு ''ஏலே புரந்தரா இதோ அந்தாக்கலே இருக்கு பாரு மூணு இலை மரம் அது தான் வில்வ மரம். சிவன் சாமிக்கு அத போட்டு பூஜைபண்ணுவாங்க. ரொம்ப விசேஷமான இலை'' அப்படின்னு சொன்னாரு.
மூணு நாள் முன்னே .. சாமி மடத்துக்காரங்க கூட இலையைக் காட்டி கேட்டாங்க. மாடு மேய்க்கறவன் கொடுத்தா பூஜை செய்ய வாங்க மாட்டாங்களோ ன்னு தான் யாருக்கும் தெரியாம கூடையிலே தெனமும் கொண்டு வச்சேங்க. சாமி சத்தியமுங்க. மன்னிப்பு கேக்கறேங்க''
மஹா பெரியவா அவனை கண்ணால் பரிபூர்ணமாக பார்த்துக்கொண்டே ''புரந்தரகேசவலு உனக்கு எதுவும் வேணுமா? ஏதாவது ஆசை இருந்தா சொல்லு, மடத்திலேருந்து செய்ய சொல்றேன்'' என்றார்.
'சிவ சிவா!! சாமி எங்கப்பாரு 'ஏலே புரந்தரா எதுக்கும் ஆசை படக்கூடாதுடாம்பாரு. எனக்கு ரெண்டே ஆசைங்க. ஒன்னு இப்போ சொல்றேன் மத்தது சாமி இந்த வூர்லேருந்து போரன்னிக்கு சொல்றேன்'' கண்லே பொலபொலன்னு கண்ணீரோடு அவன் சொன்னதைக் கேட்டு மகாபெரியவா மிக்க பரிவுடன் ''புரந்தரா உன்னுடைய முதல் ஆசையை சொல்லு' என்றார்.
'சாமி எங்கப்பாரு எனக்கு புரந்தரதாசர், தியாகராஜர் பாட்டு எல்லாம் கொஞ்சம் சொல்லி கொடுத்ததை சாமி முன்னாலே நீங்கள் இந்த ஊரிலே இருக்கிறவரை நான் பாடி காட்டி சாமி அதை கேக்கணும்''. மஹா பெரியவா புளகாங்கிதமானார். 'அப்படியே ஆகட்டும்டா. நீ பாடு நான் கேக்கறேன். சந்திர மௌலீஸ்வரர் கிருபை உனக்கு உண்டு. க்ஷேமமா இருப்பே'''. பெரியவா பிரசாதமும் தன் கழுத்திலிருந்து ஒரு துளசி மாலையும் அவனுக்கு கொடுத்து ஆசிர்வதித்தார்.
பெரியவா ஊரில் இருக்கும்வரை தினமும் வில்வமும் புரந்தரன் பாட்டும் பெரியவாளுக்கு கிடைத்தது. அவன்குரல் இனிமையாக இருந்தும் உச்சரிப்பு பிழைகளை அவ்வப்போது பெரியவா திருத்தி அவன் பாட்டில் மகிழ்ந்தார்.
21 ம் நாள் பெரியவா ஊரை விட்டு கிளம்பிட்டா. அனைவருக்கும் ஏக்கம். பிரசாதங்கள் வழங்கி புறப்படும்போதுபெரியவா கண்கள் எதையோ தேடியது. ஓரத்தில் கண்களில் நீரோடு ஒரு கம்பத்தை கட்டிக்கொண்டு புரந்தரன் நின்று கொண்டிருந்தான். அவனை கை காட்டி அருகில் அழைத்து '' புரந்தரா உன்னுடைய இரண்டாவது ஆசையை இன்னிக்கு சொல்றேன்னியே அது என்ன?
'சாமி மாடு மேக்கறச்சே நாங்க பேசிக்குவோம். அப்பாரு சொல்வாரு இத பார்றா புரந்தரா நமக்கு சாமி கிட்டேஒரு ஆசை தான் கேக்கணும். செத்துட்டம்னா மோட்சம் வேணும்னு அது மட்டும் தான் கேக்கனும்பாரு. சாமி எனக்கு மோட்சம் கிடைக்கனும்னு அருள் செய்யுங்க''
மகாபெரியவா அதிர்ந்து போனார். பரப்ரஹ்மம் வாஞ்சையோடு அவனுக்கு அருளிற்று.'' புரந்தரா உரிய காலத்தில் உனக்கு மோட்சம் கிடைக்க நான் சந்திர மௌலீஸ்வரரை வேண்டிக்கறேன். நீ சந்தோஷமா போ'. என்று ஆசிர்வதித்தார். பிறகு ஜமீன்தாரை கூப்பிட்டு இந்த புரந்தரகேசவன் சம்பந்தமா எல்லா விஷயங்களையும் மடத்துக்கு தெரியப்படுதுங்கோ'' என்றார்..பல வருஷங்களுக்கு பிறகு ஒருநாள் மத்யானம் ரெண்டு மணிக்கு பெரியவா திடீரென்று எழுந்து காமாட்சிஅம்மன் கோயில் புஷ்கரணிக்கு சென்று ஸ்நானம் செய்து தியானத்தில் அமர்ந்தார். விட்டு விட்டு ஒருமணிக்கொருதரம் புஷ்கரணியில் ஸ்நானம் ஜபம். ஆறு மணி வரை இது தொடர்ந்தது. ......பெரியவா கரையேறினா.
அப்போ ஏழு மணியிருக்கும் ஒருத்தன் மடத்திலேருந்து வேகமாக சுவாமிகள் கிட்ட வந்தான்.என்ன என்று கண்களால் வினவ ''கர்னூல்லே இருந்து தந்தி. யாரோ ''' புரந்தரகேசவலு சீரியஸ்'' என்று அனுப்பியிருக்கா. யார்னு தெரியலே பெரியவா'' .
காரியதரிசியிடம் பெரியவா சொன்னது இதுதான்:
''அந்த புரந்தர கேசவன் இப்போ இல்ல! சித்த முன்னாடிதான் காலகதி அடஞ்சுட்டான். நா அவா ஊருல போய்த் தங்கியிருந்து கிளம்பற அன்னைக்கு, 'எனக்கு நீங்க மோட்சம் வாங்கி கொடுக்கணும்னு கேட்டான்.' "சந்திரமௌலீஸ்வர ஸ்வாமி கிருபையால உனக்கு அது கிடைக்கும்"னேன். திடீர்னு அவனுக்கு ஏதோ விஷக் காய்ச்சல் ஏற்பட்ருக்கு “”புரந்தர கேசவன் இப்போ இல்லை. விஷ ஜுரத்திலே அவஸ்தைப்பட்டு போய்ட்டு வேறே பிறவி எடுத்துட்டான். அவனுக்கு இன்னும் ஆறு பிறவி இருக்கு. அதுக்கப்பறம் அவன் மோக்ஷம் போகணும்னு சந்திரமௌலிஸ்வறரை பிரார்த்தனை பண்ணி ஆறு பிறவிக்கும் ஸ்நானம் பண்ணி ஜபம் பிரார்த்தனை பண்ணி அந்த நல்ல ஆத்மாவுக்கு என்னுடைய கடமையை செஞ்சுட்டேன்"

No comments:

Post a Comment