Monday 17 February 2020

"ஒருவரின் தர்மம்,இன்னொருவருக்கும் தர்மமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை"

 
"ஒருவரின் தர்மம்,இன்னொருவருக்கும் தர்மமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை"
(பக்குவமா சொன்ன பெரியவா)
(பக்குவமான ஆன்மாவின் தீர்ப்பும்,பக்குவமாகத்தானே இருக்கமுடியும்)
தொகுப்பு-டி.எஸ்.கோதண்டராம சர்மா

கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு

தட்டச்சு-வரகூரான் நாராயணன்.


காஞ்சிபுரம் சுற்று வட்டாரத்தில் ஏராளமான சிவலிங்கங்கள் உள்ளன.வயல்வெளி ,தோட்டம்,துரவு,மாதா கோயில்,தர்கா,மயானம் போன்ற இடங்களில் மேற்கூரை கூட இல்லாமல் இருக்கின்றன .வெயிலிலும்,மழையிலும் காய்ந்தும்,நனைந்தும் இன்னல் பட்டுக் கொண்டிருக்கும் இந்த சிவலிங்கங்களுக்கு வழிபாடுகளும் இல்லை.


பெரியவாளுடைய உத்தரவை ஏற்று, சில அன்பர்கள், சிவலிங்கங்களுக்கு மேலே மண்டபம் (கோயில் கோபுர அமைப்பில் இல்லாவிட்டாலும், மழை-வெயில் தாக்காதபடி மேற்கூரை அமைப்பில்) கட்டி நித்தியப்படி ஒரு கால பூஜைக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.


மேற்கூரை கூட இல்லாத சுமார் பத்துப் பன்னிரண்டு சிவலிங்கங்களுக்கு ஸ்ரீமடத்தின் சிஷ்யர்கள் இருவர், நாள் தோறும் ஸ்ரீ மடம் வண்டியில் சென்று, அபிஷேக ஆராதனை - நைவேத்யம் செய்து வந்தார்கள்.எல்லாப் பூஜைகளையும் முடித்துக்கொண்டு,ஸ்ரீ மடத்துக்குத் திரும்பியதும் பெரியவாளுக்குப் பிரசாதம் கொடுப்பார்கள்


இந்த சிஷ்யர்கள் பூஜை செய்யும் லிங்கங்களில் இரண்டு மூர்த்திகள் மயான எல்லைக்குள் இருக்கின்றன்.


"மயானப் பகுதிக்குள் சென்றுவிட்டு, நீராடிச் சுத்தம் செய்து கொள்ளாமல்,ஸ்ரீமடத்துக்குள் எப்படி நுழைவது? அது தவறு இல்லையோ?" என்று ராமமூர்த்தி என்ற சிஷ்யருக்கு பலத்த சந்தேகம் வந்துவிட்டது.


சந்திரா என்ற மற்றொரு மெய்த்தொண்டர் சொன்னார்; " நாம் மயானத்துக்கு அங்கே நடக்கும் சடங்கில் பங்கு கொள்வதற்காகப் போகவில்லை.சிவ பூஜை செய்வதற்காகப் போகிறோம். சிவபூஜை செய்து விட்டு,உடனே ஸ்நானம் செய்வது உசிதமில்ல்லை, நமக்கு மடிக்குறைவும் கிடையாது.."


இருவருக்கும் வாக்குவாதம் முற்றிப்போய் கைகலப்பு ஏற்படும் நிலை வந்துவிட்டது.


இந்தக் கட்சிக்கும்,அந்தக் கட்சிக்குமாக நாலைந்து பேர் சேர்ந்தார்கள். யார் வேண்டுமானாலும், எவருக்கு வேண்டுமானாலும் ஆதரவு கொடுக்கலாம் தீர்ப்பு வழங்க முடியாதே!


கடைசியில், ஸ்ரீமடத்தின் 'உச்ச நீதி மன்ற'த்துக்குப் போயிற்று வழக்கு!


இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்டார்கள் பெரியவா.முடிவாக முத்தாய்ப்பான தீர்ப்பைக் கூறினார்கள்.


"ராமமூர்த்திக்கு நாம் மயான எல்லைக்குள் போகிறோம்.அதனால் தீட்டு வந்துவிட்டது.... என்று எண்ணம்..அந்த எண்ணம் தோன்றியவுடனே தீட்டும் உண்டாகி விடுகிறது!...அதனாலே அவன் ஸ்நானம் பண்ணிட்டு வரட்டும்."


"சந்திராவுக்கு ஸ்மாசனம் என்று எண்ணமே இல்லை..கோபுரம்,கர்ப்ப க்ருஹம் என்றில்லா விட்டாலும் கோயிலுக்குப் போய் மந்திரம் சொல்லி சிவபூஜை செய்துவிட்டு வருகிறோம். அதாவது, பவித்ரமான இடத்துக்குப் போய் சிவபூஜை செய்து விட்டு வருகிறோம். அதனாலே தீட்டும் ஒட்டிக்காது; தோஷமும் வராது என்று எண்ணம். ஆகவே, அவனுக்குத் தீட்டும் இல்லை; ஸ்நானமும் வேண்டாம்.


மண்டை உடைய சண்டை போட்டுக் கொண்டிருந்தவர்களுக்கெல்லாம், சந்தோஷ அதிர்ச்சி உண்டாயிற்று.


"எவ்வளவு தெளிவா,ஆணித்தரமா பெரியவா முடிவு சொல்லியிருக்கா...ஒருவரின் தர்மம்,இன்னொருவருக்கும் தர்மமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்கிறதை பக்குவமாக சொல்லிட்டாளே!" என்று வியந்து மகிழ்ந்தார்கள்.


பக்குவமான ஆன்மாவின் தீர்ப்பும், பக்குவமாகத்தானே இருக்க முடியும்!..

No comments:

Post a Comment