Thursday 13 February 2020

பக்தனுக்கு அருள்வான் பல விதத்தில்

1968 ல் பெரியவாளை செகந்தராபாத் அருகே உள்ளே ஒரு மலைக்குன்று மேல் உள்ள மஹா கணபதி கோவிலில் தர்சனம் பண்ணினார் ஒரு பக்தர்.
அப்போது பெரியவா அவருக்கு தன் படமும், திருப்பதி ஸ்ரீநிவாசப் பெருமாள் படமும் குடுத்தார். பக்தருக்கோ பரம ஆனந்தம்!
மெட்ராஸில் ஒரு ஸ்டூடியோவில் குடுத்து அப்படங்களைப் என்லார்ஜ் பண்ணி, அழகாக frame பண்ணித்தரச் சொன்னார்.
இரண்டு நாட்களுக்குப் பிறகு இடிபோல் செய்தி வந்தது …. அந்த ஸ்டூடியோவில் தீப்பிடித்து ஏறக்குறைய எல்லாமே எரிந்துவிட்டது! என்று.
அடித்துப்பிடித்துக் கொண்டு ஓடினார்……. ஸ்டூடியோ நிர்வாகி இவரைப் பார்த்ததும், “ஸார்… நீங்க கவலைப்படாதீங்க…. நீங்க குடுத்த பெரியவா படமும், வெங்கடாசலபதி படமும் பத்ரமா இருக்கு. நெருப்பு அதை கொஞ்சங்கூட தீண்டலைங்க ஸார்…” என்றார். இது ஒரு ஆச்சர்யம்!
சந்தோஷமாக அந்த படங்களை எடுத்துக் கொண்டு அவரும் ஒரு நண்பரும் காரில் பெரியவா முகாமிட்டிருந்த கார்டேர் நகருக்குச் சென்றனர்.
போகும் வழியில் ஒரு பிள்ளையார் கோவிலுக்கு சென்று வழிபட்டுக் கொண்டிருந்தபோது அடுத்த ஆச்சர்யம்…….. மடத்து பாரிஷதர் ஒருத்தர் இவர்களை அங்கே தேடிக் கொண்டு வந்து, “மெட்ராஸ்லேர்ந்து கார்ல படம் கொண்டு வந்தவாளை பெரியவா ஒடனே அழைச்சிண்டு வரச்சொல்லி சொன்னார்……..”
இது என்ன! எதிர்கொண்டழைப்பது என்பது இதுதானா? அல்ப ஜீவன்களான நம்மை அந்த மஹாப் ப்ரபு எதிர்பார்த்துக் கொண்டிருந்திருக்கிறாரா! ஆடித்தான் போனார் பக்தர்.
இரண்டு கரங்களாலும் புஷ்பங்களை அள்ளித் தூவினார் அப்படங்கள் மேல், சாக்ஷாத் பெரியவா!
அதே பக்தர் ஒருமுறை திருக்கடையூர் சென்றார் தன் நண்பருடன். அப்போது அமிர்தகடேசனுக்கு அபிஷேகம் நடந்து கொண்டிருந்தது. ஆனந்தமாக கண்டு களித்துக் கொண்டிருக்கும்போது, இவருக்கு ஒரு அரிய ஆனந்தமான ஒரு காக்ஷி !……… கருவறை லிங்கத்தின் மேல் பூர்ணசந்த்ர முகத்துடனும், அபய கரத்துடனும் சாக்ஷாத் பெரியவா தெரிந்தார்! இவரோ, தனக்கு பெரியவா மேல் உள்ள பக்தியால் ஏற்பட்ட மனப்ரமை என்று எண்ணினார்.
அதே சமயம் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த நண்பர் இவர் தோளைத் தட்டினார்…….. ”ஸ்வாமி…. உள்ள பாரும் ஒய்!…. பெரியவா தெரியறாளா? என்ன பாக்யம் ! என்ன பாக்யம்! சங்கரா.சங்கரா..” கண்கள் பனிக்க கன்னத்தில் போட்டுக் கொண்டார்.
பக்தர் ஸ்தம்பித்துவிட்டார்! சாக்ஷாத் பரமேஸ்வரனே தான்! என்பதை ப்ரத்யக்ஷமாக ஒரே சமயத்தில், கற்பனையோ என்று சந்தேகப் படமுடியாமல், இரண்டு பேருக்குமே உணர்த்திவிட்டாரே பெரியவா!!!!!

No comments:

Post a Comment