Friday, 28 February 2020

"உங்கிட்ட இருக்கிற பணத்துக்கு நீ டிரஸ்டி, அவ்வளவுதான்,சொந்தக்காரன்னு நினைச்சுக்காதே.."(கஞ்ச மகா பிரபுக்கு கருணை காட்டிய சம்பவம்)

"உங்கிட்ட இருக்கிற பணத்துக்கு நீ டிரஸ்டி, அவ்வளவுதான்,சொந்தக்காரன்னு நினைச்சுக்காதே.."(கஞ்ச மகா பிரபுக்கு கருணை காட்டிய சம்பவம்)


(பெரியவா,ஒரு ஸ்பெஷலிஸ்ட் - எல்லா நோய்களுக்கும், "நோய் நாடி,நோய் முதல் நாடி" நோயாளிகளின் உள்ளமும் நாடி, அதற்கேற்ற மருந்து கொடுப்பார்கள்)
.சொன்னவர்;ஓர் அணுக்கத் தொண்டர் ஸ்ரீமடம்

தொகுத்தவர்;டிஎஸ்.கோதண்டராம சர்மா


தட்டச்சு;வரகூரான் நாராயணன்.
.


பிரபு என்று எவரையாவது சொல்ல வேண்டுமென்றால் இவரைத்தான் சொல்ல வேண்டும்.
கஞ்ச மகா பிரபு!
காசுக்குப் பஞ்சமில்லை,செலவழிக்க,அனுபவிக்க மனம்தான் இல்லை.
பெரியவாள் தரிசனத்துக்கு வந்தார்.
வலதுகையால் வாயை மறைத்துக்கொண்டு உருக்கமாகச் சொல்ல ஆரம்பித்தார்.
"எனக்கு ரத்த அழுத்தம்,டயாபடீஸ் இரண்டும் ரொம்ப நாளா இருக்கு.இப்ப கன்ஸர் வேறே வந்திருக்கு. ரொம்பக் கஷ்டமா இருக்கு. பெரியவா பரிஹாரம் சொல்லணும்..."
"நான் சொன்னால் சொன்னபடி செய்வாயா?"
"செய்யறேன்."
"ரொம்பக் கஷ்டமா இருக்குமே.."
"இருக்கட்டும். வியாதி நீங்கினால் போதும்.... பெரியவா என்ன உத்திரவு போட்டாலும்,அதன்படி நடக்கிறேன்.....ப்ளட்பிரஷர்,கான்ஸர்,ஷூகர்-எல்லாம் என்னை விட்டுவிட்டுப் போனால் போதும்..." என்று சொல்லி விட்டுக் கண்களைத் துடைத்துக் கொண்டார்.
பொதுவாகவே, அவ்யாஜ கருணை (காரணமில்லாத கருணை) பெரியவாளுக்கு.இவரோ கண்ணீர் விட்டு சரணாகதி பண்ணுகிறார். கைவிட முடியுமா?
பெரியவாள் சொன்னார்கள்.
1) கிணற்றில் தண்ணிர் இருக்கு.'தண்ணீர் என்னுடையதுதானே' என்று சொந்தம் கொண்டாடி, கிணறே தண்ணிரைக் குடித்து விடுவதில்லை.
2)மரத்தில் பழம் பழுக்கிறது.'என் மரத்துப் பழம்; நான்தான் சாப்பிடுவேன்' என்று மரம் பழங்களைச் சாப்பிடுவதில்லை.
3)பசுமாடு பால் கொடுக்கிறது; பசுமாடு பால் குடிப்பதில்லை.
4)எத்தனையோ செடி-கொடிகள், காய் காய்க்கின்றன ஒரு காயைக்கூட -அவைகள் தமக்கு என்று வைத்துக்
கொள்வதில்லை.
-இப்படி ஓரறிவு-ஈரறிவு படைத்த பிராணிகளே கூட, பரோபகாரம் செய்கின்றன.மனிதனுக்கு ஆறறிவு
என்கிறார்கள்.அவன் மற்றவர்களுக்கு எவ்வளவு உபகாரம் செய்யணும்?"
"உன்னிடம் பணம் இருக்கு. நீயும் சரியாக அனுபவிக்கல்லே,பரோபகாரம்-தர்மம் செய்யல்லே.
"போன ஜன்மத்துப் பாவங்கள் ஒன்று சேர்ந்து வியாதியாக வந்து உன்னைப் படுத்துகிறது. பாவம் போகணுமானால் தான-தர்மம் செய்யணும்."
"இஷ்டா-பூர்த்தம்னு தர்ம கார்யம் தெரியுமோ? குளம் வெட்டுவது,கோயில் திருப்பணி, ஏழைகளுக்குஉதவி,சொந்தக்காரர்களுக்கு உதவி-இப்படி,நல்ல காரியங்களிலே பணத்தைச் செலவிடணும். அப்புறம்... வியாதிகளால் கஷ்டப்படுகிற அநாதைகளுக்கு மருந்து வாங்கிக்கொடு. அம்மா,அம்மான்னு ஒருத்தன் கை நீட்டினால்,அவன் வெறுங்கையோட போகப்படாது என்ன?
"உங்கிட்ட இருக்கிற பணத்துக்கு நீ,டிரஸ்டி, அவ்வளவுதான்.சொந்தக்காரன்னு நினைச்சுக்காதே..."
கஞ்ச மகாப்பிரபு குலுங்கிக் குலுங்கி அழுதார், பின்னர் கர்ண மகாப்ப்ரபுவாக நெடுங்காலம் ஜீவித்திருந்தார்.
பெரியவா,ஒரு ஸ்பெஷலிஸ்ட்- எல்லா நோய்களுக்கும் "நோய் நாடி,நோய் முதல் நாடி," நோயாளிகளின் உள்ளமும் நாடி அதற்கேற்ற மருந்து கொடுப்பார்கள்

Wednesday, 26 February 2020

‘ஐயா…இந்தப் பெரியவரு மடத்து சாமியைப் (மஹாபெரியவா) பார்க்கணுமாம்.



பல வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்வு இது
மஹாபெரியவா அப்போது காஞ்சி ஸ்ரீமடத்தில் இருந்தார். மாலை வேளை….
மடத்து வாசலில் ஒரு சைக்கிள் ரிக்ஷா வந்து நின்றது. ரிக்ஷா ஓட்டி கீழிறங்கி வண்டியில் அமர்ந்திருந்த பெரியவர் ஒருவரைக் கைத்தாங்கலாக கீழே இறக்கி விட்டான். ‘என்னை மடத்துக்குள் கொண்டு விடப்பா’ என்பதாக அவனிடம் ஜாடையும் பேச்சும் கலந்து பெரியவர் சொல்ல மடத்துக்குள் அழைத்துச் செல்ல முற்பட்டான் ரிக்‌ஷா ஓட்டி.
கலைந்த தலையும் அழுக்கு லுங்கி அணிந்தபடியும் இருந்ததால், தான் இதே கோலத்தில் ஸ்ரீமடத்துக்குள் செல்வது உசிதமாக இருக்காது என்று ரிக்ஷா ஓட்டியே தீர்மானித்தான் போலும். எனவே, அங்கிருந்த மடத்துச் சிப்பந்தி ஒருவரை அழைத்து ‘ஐயா…இந்தப் பெரியவரு மடத்து சாமியைப் (மஹாபெரியவா) பார்க்கணுமாம்.
கூட்டியாந்திருக்கேன். கையைப் புடிச்சுக் கூட்டினு போ. சாமியைப் பார்த்து முடிச்சதும் வெளில என் வண்டி கிட்ட கொண்டு வுட்டுரு’ என்று சொல்லிட்டு வெளியே போனான்.
பெரியவர் கைமாறினார்.
பெரியவருக்கு எப்படியும் வயது எண்பதுக்கு மேல் இருக்கும் என்று தோற்றம் சொன்னது.
உள்ளடங்கிய கண்கள், கோணல் மாணலாகக் கட்டிய நாலு முழ வேஷ்டி.. கசங்கிய வெள்ளைச் சட்டை. மேல் சட்டைப் பைக்குள் ஒரு மூக்குப் பொடி டப்பாவும் பத்துப் பதினைந்து ரூபாயும் தெரிந்தன.
தனியாக நடப்பதற்கே பெரிதும் சிரமப்பட்ட அந்தப் பெரியவரைக் கைத்தாங்கலாகப் பிடித்து, பெரியவா இருந்த இடம் அருகே விட்டார் சிப்பந்தி. மேடை போல் இருந்த ஓரிடத்தில் வசதியாக உட்கார்ந்து கொண்டார் பெரியவர். வலக் கையை நெற்றியில் வைத்து பெரியவா அமர்ந்திருந்த இடத்தைப் பார்த்தார்.
தான் இருந்த இடத்துக்கு எதிரே மஹாபெரியவா அமர்ந்திருப்பது அரைகுறையாக அவருக்குத் தெரிந்தது. இருந்த இடத்தில் இருந்தபடியே கன்னத்தில் போட்டுக் கொண்டு தரிசித்தார் பெரியவா.
பெரியவரைப் பார்த்துப் புன்னகைத்தார் மஹாபெரியவா. இந்தப் பெரியவர் இந்த சாயங்கால வேளையில் ஏன் இங்கே வந்திருக்கிறார் என்பதை அறியாதவரா அந்த மகான்?
ஒரு சிஷ்யன் ஓடோடி வந்து பெரியவா அருகே நின்றான். வாய் பொத்தி, ஏதோ ஒரு தகவலை குசுகுசுப்பாகச் சொன்னான். அதாவது பெரியவா தரிசனத்துக்காக அப்போது ஸ்ரீமடத்துக்கு சில முக்கிய பிரமுகர்கள் வந்திருப்பதாகவும், வெளியே அவர்கள் காத்திருப்பதாகவும் தகவல் சொன்னான். அன்று யாரையும் பார்க்க இயலாது என்றும் மறுநாள் காலை வருமாறும் தகவல் சொல்லி அனுப்பினார் மஹாபெரியவா. சிஷ்யன் ஓடிப் போய் விட்டான்.
தரிசனத்துக்கு வந்திருந்த ஒரு சிலருக்கும் பிரசாதம் கொடுத்து அனுப்பிவிட்டார் மஹாபெரியவா.
இப்போது அங்கு இருப்பது மஹாபெரியவாளும், உள்ளூர்ப் பெரியவரும் தான்.
இன்னமும் அந்தப் பெரியவர் தன் கண்களை இடுக்கிக் கொண்டு மஹாபெரியவா அமர்ந்திருந்த இடத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்.
மஹாபெரியவா தன் ஸ்தானத்தில் இருந்து எழுந்தார். இறங்கினார். பெரியவரை நோக்கி நடந்தார்.
சிஷ்யர்கள் பிரமித்துப் போனார்கள். ஏனென்றால் எந்த ஒரு பக்தருக்கும் அனுக்ரஹம் செய்வதற்காக மஹாபெரியவா இது போல் எழுந்து சென்று அவர்கள் பார்த்ததில்லை.
காஞ்சிபுரத்துப் பெரியவர் தான் அமர்ந்த இடத்திலேயே இருக்கிறார். தள்ளாத வயது அல்லவா! அவர் அருகில் சென்ற மஹாபெரியவா தன் தலையில் வில்வமாலை ஒன்றை வைத்துக் கொண்டு ‘தெரியறதா” என்று கேட்டார் தீர்க்கமாக.
கண்களை மிகவும் இடுக்கிக் கொண்டு பார்த்த பெரியவர் ‘ தெரியலை’ என்றார்.
இதை அடுத்து தனக்கும் அந்த பெரியவருக்கும் நடுவில் இருந்த இடைவெளியை இன்னும் கொஞ்சம் சுருக்கினார் மஹாபெரியவா. அருகில் இருந்த ஒரு புத்தம் புது ரோஜா மாலையைக் கையில் எடுத்தார் மஹாபெரியவா. தலையில் வைத்துக் கொண்டார். அதை பெரியவா தன் சிரசில் அணிந்த பிறகு அந்த ரோஜா மாலை இன்னும் அழகாகத் தெரிந்தது. இப்போது பெரியவரைப் பார்த்து ‘இப்ப தெரியறதா? என்று கேட்டார் மஹாபெரியவா.
ரொம்பவும் சிரமப்பட்டு உற்றுப் பார்த்த பெரியவர் ‘தெரியலை’ என்றார் மீண்டும்.
ரோஜா மாலையை எடுத்துத் தன் சிஷ்யனிடம் நீட்டினார் பெரியவா. அவன் ஓடோடி வந்து அதை வாங்கிக் கொண்டான். பிறகு ஒரு காஷாய வஸ்திரத்தை எடுத்து அதைத் தன் தலையில் வைத்துக் கொண்டார் மஹாபெரியவா. ‘இப்ப தெரியறதா…. பாருங்கோ” என்றார் மஹாபெரியவா.
“ஊஹும்” என்பதாகத் தன் உதட்டைப் பிதுக்கினார் பெரியவர்.
அப்போது அந்த இடத்தில் இருந்த சிஷ்யர்கள் குழம்பிப் போனார்கள். ‘தெரியறதா? என்று பெரியவா எதைக் கேட்கிறார், ‘தெரியல’ என்று பெரியவர் எதைச் சொல்கிறார் என்பது புரியாமல் தவித்துப் போனார்கள். சிஷ்யர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் கேள்விக் குறியுடன் பார்த்துக் கொண்டனர்.
அதற்குள் யாரோ ஒரு சில பக்தர்கள் பெரியவா இருந்த இடத்துக்குள் நுழைய முற்பட்டு அவரை தரிசிக்க யத்தனித்தார்கள். இதை அறிந்த பெரியவா அவர்களை சைகை காட்டி வெளியே அனுப்பினார். சிஷ்யர்களும் அவர்களிடம் ஓடிப் போய் ‘இப்ப பெரியவா உங்களைப் பார்க்க மாட்டார்’ என்று சொல்லி அனுப்பினார்.
அந்த இடத்தில் பெரும் அமைதி நிலவியது.
தான் எதிர்பார்த்து வந்தது இன்னமும் நிறைவேறவில்லை என்பதாக இருந்தது
காஞ்சிபுரத்துப் பெரியவரின் முகம்.
காஞ்சிபுரத்துப் பெரியவர் எதை எதிர்பார்த்து வந்திருக்கிறார்?
அது மகா பெரியவாளுக்கும் அந்தப் பெரியவருக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம்.
தண்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு, பெரிய பெரிய ருத்திராட்ச மணிகளால் கோர்த்து வைக்கப்பட்டிருந்த ஒரு மாலையை எடுத்துத் தலையில் வைத்தவாறு ‘தெரியறதா’ என்று கேட்டார் பெரியவா.
அவ்வளவு தான்…அதுவரை ஏமாந்து போயிருந்த பெரியவரின் முகம் திடீரென பிரகாசம் ஆனது. அவரது விழிகளில் இருந்து தாரை தாரையாக நீர் வழிந்தது. ஏதேதோ பேச வாய் எடுத்தவருக்கு அந்தக் கணத்தில் அது முடியாமல் போனது.
மெள்ளச் சுதாரித்துக் கொண்டு ‘எல்லாமே தெரியறது பெரியவா. நல்லா தெரியறது பெரியவா’ என்று கன்னத்தில் மாறி மாறி அறைந்து கொண்டு அந்த பரப்பிரம்மத்தை நன்றியுடன் பார்த்தார். தன் இரு கைகளையும் கஷ்டப்பட்டு உயரே தூக்கி நெகிழ்ச்சியுடன் கும்பிட்டார் பெரியவர். பிறகு உடல் வளைந்து கொடுக்காவிட்டாலும் சிரமப்பட்டுத் தரையில் விழுந்து அந்தக் கருணை தெய்வத்தை உளமார வணங்கினார்.
பிறகு அந்தப் பெரியவரே மெள்ள எழுந்தார். பெரியவாளுக்கு முன்பாக நின்றார். அவரது திருமுகத்தையே நன்றியுடன் பார்த்துக் கொண்டிருந்தார். கண்களில் இருந்து கசியத் துவங்கிய நீர் வரத்து இன்னும் நிற்கவில்லை.
விரலைச் சொடுக்கி, சிஷ்யர்களை அருகே வரச் சொன்னார் மஹாபெரியவா. ஓடோடி வந்தனர்.
‘இவா வந்த ரிக்ஷா வெளில நிக்கும். அதுல பத்திரமா இவரை ஏத்தி அனுப்ச்சுட்டு வாங்கோ. சந்தோஷமாப் புறப்படட்டும்’ என்று சொல்லிவிட்டு விறுவிறுவென்று அங்கிருந்து வெளியேறியது அந்தக் கலியுக தெய்வம்.
உடலிலும் உள்ளத்திலும் சந்தோஷம் கொப்பளித்த பெரியவரைக் கைத்தாங்கலாகக் கூட்டிக் கொண்டு ஸ்ரீமடத்தின் வாசலுக்குப் போனார்கள் சிஷ்யர்கள். தான் கூட்டி வந்த பெரியவர் வெளியே வருவதைப் பார்த்தவுடன், தரையில் குத்துக்காலிட்டு அமர்ந்திருந்த ரிக்ஷாக்காரன் ஓடோடி வந்தான். ‘வுடுங்க சாமி… இனிமே நா அவரை இட்டுகினு போயிடறேன்’ என்று சொல்லிவிட்டு, ரிக்ஷாவுக்குள் பெரியவர் ஏறி அமர்வதற்கு உதவி செய்தான்.
பெரியவரை ரிக்ஷாவுக்குள் ஏற்றி அனுப்பிய சிஷ்யர்கள் இருவரும் மடத்துக்குள் நுழையும் போது பேசிக் கொண்டார்கள்.
‘உனக்குப் புரியறதாடா பெரியவா ‘தெரியறதா?ன்னு எதைக் கேட்டார்னு?- முதலாமவன்.
இல்லேடா…என்னைவிட ரொம்ப வருஷமா நீ பெரியவாளுக்குக் கைங்கர்யம் பண்ணிண்டு இருக்கே….. உனக்கே புரியலேன்னா எனக்கு எப்படிப் புரியும்? இது இரண்டாமவன்.
நானும் எத்தனையோ பேரைப் பார்த்திருக்கேன். ஆனா, இது மாதிரி ஒரு அனுபவத்தைப் பார்த்ததில்லை. பெரியவா தெரியறதா? ன்னு எதைக் கேட்டார்னும் புரியல. ‘தெரியல’னு அடிக்கடி அந்தப் பெரியவர் எதைச் சொன்னார்னும் புரியலை. ஆனா அவர் கண்ல ஜலம் வந்ததைப் பார்த்த உடனே என் கண்களும் ஈரமாயிடுச்சு. சமாச்சாரம்தான் என்னன்னு புரியாம ஒரே குழப்பமா இருக்கு’ என்று சொன்ன முதலாமவன் கொட்டாவி விட்டுக் கொண்டு தூங்கப் போயிட்டான்.
இதற்கான விளக்கம் அடுத்த நாளே அனைவருக்கும் தெரிந்தது.
அடுத்த நாள் அதிகாலை அந்தப் பெரியவர் இறைவனடி சேர்ந்த செய்தி ஸ்ரீமடத்துக்கு யார் மூலமாகவோ வந்து சேர்ந்தது.
முதல் நாள் மாலை ஸ்ரீமடத்துக்கு இந்தப் பெரியவர் வந்த போது அவருக்கு உதவிய ஊழியர்களும் சிப்பந்திகளும் சிஷ்யர்களும் ஏகத்துக்கும் அதிர்ந்து போனார்கள்.
அனுபவம் வாய்ந்த ஸ்ரீமடத்து காரியதரிசிகளின் பேச்சில் இருந்து இதற்கான விளக்கம் அனைவருக்கும் கிடைத்தது.
தன் வாழ்நாளின் கடைசி நிமிடங்களில் இருப்பதை எப்படியோ உணர்ந்து கொண்டார் காஞ்சிபுரத்துப் பெரியவர். தன் தேகம் இந்தப் பூவுலகில் இருந்து மறைவதற்கு முன் கயிலைக் காட்சியைக் கண்டு தரிசிக்க விரும்பியிருக்கிறார். தான் விரும்பும் தரிசனம் எப்படியாவது மஹாபெரியவாளிடம் கிடைக்கும் என்று பரிபூரணமாக நம்பி ஒரு ரிக்ஷாக்காரரை அமர்த்திக் கொண்டு ஸ்ரீமடத்துக்கு வந்து சேர்ந்திருக்கிறார்.
தன்னை நாடி வந்த உள்ளூர்ப்பெரியவரின் ஏக்கத்தைத் தன் ஞான திருஷ்டியால் அறிந்து கொண்ட மஹாபெரியவா, கயிலைவாசியான அந்த ஈசனின் சொரூபத்தை அவருக்குக் காட்டி அனுக்ரஹித்து மோட்ச கதி கொடுத்தார் என்று இதற்கு விளக்கம் சொல்லப்பட்டது.
ஆக, பெரியவாளின் திருமுகத்தில் ஈஸ்வர தரிசனத்தைக் கண்டு பரவசம் கொள்ள வேண்டும் என்பதற்காகவே அந்தப் பெரியவர் ஸ்ரீமடத்துக்கு வந்திருந்தார் என்பது உறுதியானது.
சிவபெருமானின் ஓர் அம்சம் தான் மஹாபெரியவா என்று சொல்லப்படுவதுண்டு. இதை அனுபவப்பூர்வமாக உணர்ந்த சில பக்தர்கள் மஹாபெரியவாளை தரிசித்து, அத்தகைய தரிசனம் பெற்றிருக்கிறார்கள். அந்த வகையில் காஞ்சிபுரத்துப் பெரியவர் மறைவதற்குச் சில மணி நேரங்களுக்கு முன், அவருக்கு அத்தகைய ஒரு தரிசனத்தைக் காட்டி அருளி அருக்கிறார் மஹாபெரியவா.
அதனால் தான் ஒவ்வொரு முறையும் ‘தெரியறதா? என்று பெரியவா கேட்ட போதும் ‘தெரியல’ என்று சொல்லிக் கொண்டே வந்தவர், ருத்திராட்ச மாலையை எடுத்துத் தன் தலையில் வைத்துக் கொண்டதும், சாட்சாத் அந்த சிவபெருமானே பெரியவா முகத்திலே தரிசனம் தந்திருக்கிறார். இதன் பின்னால் அந்தக் காஞ்சிபுரத்துப் பெரியவருக்கு மோட்சம் கிட்டாமலா இருக்கும்?

Tuesday, 25 February 2020

நமஸ்கரித்தவர் எழுந்திருக்கவில்லை"


நமஸ்கரித்தவர் எழுந்திருக்கவில்லை"

(இனி, எந்த ஒரு தாயின் 'கர்ப'மும் அவருக்குக் 'கிருஹம்' ஆக முடியாது! 'யத்ர கத்வா, ந நிவர்த்தந்தே.' அவருக்கு இனி மண்வாசனை பிராப்தமில்லை)
.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்

முதுமை,உடல் தளர்ச்சி,துணை இல்லாமல் வெளியே போகமுடியாது. ஆட்டோ,டாக்ஸியில் போகலாமே என்றால், அதற்கெல்லாம் வசதியில்லை.
நெஞ்சு மட்டும் படபடவென்று அடித்துக் கொள்கிறது - 'அவன் வர்றதுக்குள்ளே, இவாளைப் பார்த்துடணும்..
ஒரே ஒருதடவை..."

வெறும் பகற்கனவு என்பது அவருக்கே புரிகிறது. ஆனால், நாள் ஆக ஆக, தவிப்பும் வளர்ந்துகொண்டே
போயிற்று.

வாசற்படியிலே, காலடிச் சத்தம் கேட்டாலே, 'அவன் தானோ?' என்ற திகில். 'போகவேண்டியிருக்கிறதே?'
என்ற அச்சம் இல்லை; 'தரிசிக்காமல் போகிறோமே!' என்ற ஏக்கம்.

ஒருநாள் வாயிற்புறத்தில் காலடிச் சத்தம்.
ஆமாம், காலடிச் சத்தம்.
"உங்களை அழைச்சிண்டு காஞ்சிபுரம் வரும்படி பெரியவா உத்திரவு..." என்றார் வந்தவர்.
வயோதிகரின் ஆத்மா சிலிர்த்தது.
'நான் எனக்குள்தானே பேசிக்கொண்டேன்? அதெப்படி பெரிவாளுக்குக் கேட்டிருக்கும்.?'
'நான் என்ன பண்டிதனா? அக்னிஹோத்ரியா? இல்லை, அமைச்சரா? அரசியல் தலைவனா? எப்போதோ ஒரு தேங்காயைச் சமர்ப்பித்து, நமஸ்காரம் செய்த நினைவு. நெஞ்சில் பதிந்த திருவுருவம், காலத்தால் மறைந்து விடவில்லை.'
மடத்துப் பணியாளர், " என் தோளைப் புடிச்சிண்டு நடந்துவந்து கார்லே ஏறிக்கிறேளா?" என்றார்.
"கார்! 'விமானத்தையல்லவா எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்!'
இவர்கள் இருவரும் காஞ்சிபுரத்தைச் சென்றடைந்த சமயத்தில், பெரியவா அன்னை காமாக்ஷி கோயிலில் இருந்தார்கள்.
"அம்பாளைத் தரிசனம் பண்ணிட்டுப் போகலாமா?" என்றார் சிப்பந்தி.
"முதல்லே, பெரியவா தரிசனம்....அப்புறமா..."
பெரியவாள் திருமுன்னிலையில் போய் நின்றார். பேச்சு வரவில்லை. கண்கள் பேசிக்கொண்டன. ஒரு வழியாகச் சமாளித்துக்கொண்டு, பெரியவாளுக்கு நமஸ்காரம் செய்தார்.
ஐந்து நிமிஷமாயிற்று. எழுந்திருக்கவேயில்லை.
பெரியவா தன்னுடைய ஒரு காஷாய வஸ்திரத்தைக் கொடுத்து,அந்தச் சரீரத்தின்மேல் போர்த்தச் சொன்னார்கள்.
மடத்துப் பணியாளர்களே இறுதிச் சடங்குகளை செய்யும்படி உத்திரவாயிற்று.
"முதல்லே, பெரியவா தரிசனம்; அப்புறமா..."
அப்புறமா அம்பாளை தரிசித்துக் கொள்ளலாம்- என்று சொல்லத்தானே விரும்பினார்.
அவர் விருப்பம் நிறைவேறிவிட்டது.
அரைமணி கழித்து, அவர் 'விமான'த்தில் பயணித்துக் கொண்டிருந்தார் - அம்பாளை தரிசிக்க.
இனி, எந்த ஒரு தாயின் 'கர்ப'மும் அவருக்குக் 'கிருஹம்' ஆக முடியாது!
'யத்ர கத்வா, ந நிவர்த்தந்தே.'
அவருக்கு இனி மண்வாசனை பிராப்தமில்லை

Today is the only one day in all the days that will ever be. But what will happen in all the other days that ever come can depend on, what you do today.

Today is the only one day in all the days that will ever be.  But what will happen in all the other days that ever come can depend on, what you do today.


Monday, 24 February 2020

"கூடிய சீக்கிரம் நீ கயாவுக்குப் போய் சிராத்தம் பண்ணு...அம்மாவுக்கு விடுதலை கிடைக்கும்..."-பெரியவா


"கூடிய சீக்கிரம் நீ கயாவுக்குப் போய் சிராத்தம் பண்ணு...அம்மாவுக்கு விடுதலை கிடைக்கும்..."-பெரியவா

.( மந்திராலய பக்தருக்கு அருளிய சம்பவம்)(இந்தக் காவியரசருக்கு ஆவிகளின் மொழியும் தெரியுமோ? பாவிகளான நமக்கு என்ன தெரியும்?!)

சொன்னவர்; ஸ்ரீமட பக்தர் ஜோஷி.

தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா

தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

மந்திராலயம் ஸ்ரீராகவேந்திரர் பிருந்தாவன தரிசனத்துக்காக சென்னையிலிருந்து பம்பாய் மெயிலில் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தார், ஒரு பக்தர். தூக்கக் கலக்கம்.புகைவண்டி ஒரு ஸ்டேஷனில் நின்றதும், தான் இறங்க வேண்டிய ரயில்நி லையம் அதுதான் என்று எண்ணி பரபரவென்று இறங்கிவிட்டார். மெயில் புறப்பட்டுச் சென்ற பின்னர் பெயர்ப் பலகையைப் பார்த்தார். 'குண்டக்கல்!'
"அட தேவுடா! இங்கே இறங்கிட்டேனே?..."
அதே மெயிலில் வந்த ஸ்ரீமடத்தின் பக்தர் ஜோஷி என்பவரும்அவர் நண்பர்களும், குழம்பிப் போய் நின்று கொண்டிருந்த மந்திராலய பக்தரைப் பார்த்தார்கள். அந்தச் சந்தர்ப்பத்தில் ஸ்ரீபெரியவா ஹகரியில் தங்கியிருந்தார்கள்.. அவர்களைத் தரிசிப்பதற்காகத்தான் ஜோஷி முதலியவர்கள் வந்து கொண்டிருந்தார்கள்.
"தூக்கக் கலக்கத்தில் இங்கே இறங்கி விட்டேன்" என்றார் மந்திராலயம்.
"கலக்கம் இல்லே, ரொம்பத் தெளிவாகத்தான் இறங்கியிருக்கிறீர்கள்...வாருங்கள். ஹகரிக்குப் போய், பெரியவாளைத் தரிசனம் பண்ணலாம்" என்றார் ஜோஷி.
பெரியவா திருவடிகளில் நமஸ்காரம் செய்துவிட்டு ஜோஷி கோஷ்டியினர் ஒதுங்கி நின்றார்கள். வழக்கம் போல் ஒவ்வொருவராக விசாரணை. மந்திராலயம் அன்பர் முறை வந்ததும்,"இவர் இங்கே வருவதாக இல்லையே! நீங்கள் அழைத்து வந்தீர்களா?" என்று ஜோஷியைப் பார்த்துக் கேட்டார்கள்.
மந்திராலய பக்தருக்குப் பயம் வந்துவிட்டது.
"நான், இங்கே பெரியவாளைப் பார்க்காமல், நேரே மந்திராலயம் போக நினைத்ததால்தான் அங்கே போகமுடியாமல் போயிடுத்து...."
பெரியவாள் அவரை அருகில் அழைத்தார்கள். மெல்லிய குரலில் நீளமாகப் பேசினார்கள்.
அவ்வப்போது மந்திராலய பக்தர், "ஆமாம்...ஆமாம்..." என்று பெரியவாள் சொன்னதை ஏற்றுக் கொண்டதற்கு அடையாளமாகத் தலையை ஆட்டிக் கொண்டிருந்தார்.
மந்திராலய அன்பரின் தாயார் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டு விட்டாராம். "அப்படித் தானே?" என்று பெரியவாள் கேட்டார்கள்.
"ஆமாம்.." என்று குற்ற உணர்வுடன் பதில்.
"கூடிய சீக்கிரம் நீ கயாவுக்குப் போய் சிராத்தம் ..பண்ணு...அம்மாவுக்கு விடுதலை கிடைக்கும்..."-பெரியவா
பின்னால் மந்திராலய அன்பர் வந்து பெரியவாள் பேசிய பேச்சுக்களையும், உத்தரவையும் எங்களிடம் தெரிவித்தார்.
"கிணற்றில் விழுந்து உயிரை விட்டவரின் ஆவி நிர்க்கதியாகத் தான் தவித்துக் கொண்டிருப்பதைக் கூறி, தனக்கு விடுதலை கேட்டுப் பெரியவாளைப் பிரார்த்தித்திருக்கும். அதனால்தான், அவளுடைய பிள்ளையாண்டானை குண்டக்கல்லில் இறங்கச் செய்து தன்னிடம் வரவழைத்து விட்டார்கள் பெரியவா" என்றார் ஜோஷி.
உண்மையாகவே இருக்கலாம். இல்லாவிட்டால் மந்திராலய அன்பருடைய தாயாரின் துர்மரணம் குறித்து பெரியவாளுக்கு எப்படித் தெரியும்?
இந்தக் காவியரசருக்கு ஆவிகளின் மொழியும் தெரியுமோ?
பாவிகளான நமக்கு என்ன தெரியும்?!

Friday, 21 February 2020

மடத்து மளிகைகடை பாக்கியை அசலும்,வட்டியுமா கொடுத்து பைசல் பண்ணின பெரியவா

 
மடத்து மளிகைகடை பாக்கியை அசலும்,வட்டியுமா கொடுத்து பைசல் பண்ணின பெரியவா

(மூணு நாலு வருஷம் முன்னாடி கடைக்காரர் சொன்னதை நினைச்சுண்டு,நினைவும் வைச்சுண்டு இருந்ததும்,அவரோட பேரன் வந்ததும் ,அதை யாரும் சொல்லாமலே தெரிஞ்சுண்டதும் இன்னொரு ஆச்சரியம்)
கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
நன்றி- குமுதம் பக்தி (நேற்று வந்தது
19-02-2020ல் வந்த குமுதம் பக்தி) (ஓரு பகுதி)
சந்திரமௌளீஸ்வர பூஜை முடிச்சுட்டு, யதா ஸ்தானத்துக்கு வந்து உட்கார்ந்தார் மகாபெரியவா. பக்தர்கள் வரிசையா வந்து மகானை நமஸ்காரம் பண்ணி,பிரசாதம் வாங்கிண்டு நகர்ந்துண்டு இருந்தா.

கிட்டத்தட்ட ரெண்டு மணி நேரம் ஆகியிருக்கும்.மகாபெரியவா தன்னோட பக்கத்தில் இருந்த அணுக்கத் தொண்டர் ஒருத்தரைக் கூப்டார்.

மடத்து வாசல்ல செவப்புக்கலர்ல அரக்கை சட்டை போட்டுண்டு இருபது இருபத்தோரு வயசுப் பையன் ஒருத்தன் வரிசைல நிற்கறானான்னு பாரு!"

பெரியாவா வார்த்தையை முடிக்கறதுக்கு முன்னாலயே அந்தத் தொண்டர் பரபரத்தார். "இதோ பெரியவா ஒடனே போய்ப் பார்த்துக் கூட்டிண்டு வரேன்!"

சொன்ன தொண்டரை, "அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்..!' அப்படிங்கற மாதிரி கையை அசைச்சுத் தடுத்துட்டு,"என்ன சொல்றேன்னு முழுசா கேளு...அந்தப் பையனை நன்னாப் பார்த்துக்கோ.பக்கத்துல உள்ள ஜவுளிக் கடைக்குப் போய் அந்தப் பையன் சைசுக்கு பேண்ட் சட்டை தைக்கிற அளவுக்கு நல்ல துணியா வாங்கிண்டு வா நான் சொன்னேன்னு ஸ்ரீகார்யத்துக்கிட்ட அதுக்கான பணத்தை வாங்கிண்டு போ!" சொன்னார் பெரியவா

அப்படியே வெளியில போய்ப் பார்த்த தொண்டர்,அங்கே பெரியவா சொன்ன அடையாளத்துல ஒருத்தன் தரிசன வரிசைல நின்னுண்டு இருக்கறதைப் பார்த்தார். உடனே ஸ்ரீமடத்து மேனேஜர் கிட்டே சொல்லி பணம் வாங்கிண்டுபோய்,ஜவுளி வாங்கிண்டு வந்து பெரியவா முன்னிலையில் வைத்தார்.

அதைப் பிரிச்சுக் காட்டச் சொன்ன பெரியவா,"பேஷ் நன்னாத்தான் வாங்கிண்டு வந்திருக்கே. நல்லது..நான் சொன்னேன்னு ஸ்ரீகார்யத்தைக் கூட்டிண்டு வா!" சொல்ல, அடுத்த நிமிடம் ஸ்ரீகார்யம் மகாபெரியவா முன் ஆஜரானார்.

"ஓரு ஆறாயிரத்து இருநூத்தம்பது ரூபாயை எண்ணி எடுத்து ஒரு கவர்ல போட்டுக் கொண்டுவா. அதை இந்தத் துணிமணியோட வைச்சு,ஒரு மூங்கில் தட்டுல வை. கூடவே கொஞ்சம் கனிவர்க்கமும்,புஷ்பமும் வைச்சுடு" மகானோட கட்டளை எல்லாமும் மளமளன்னு நிறைவேறித்து..

இதை அத்தனையும் செஞ்சு முடிக்கவும், வரிசை மெதுவா நகர்ந்து மகான் ஆரம்பத்துல சொன்னாரே, அந்த செவப்பு சட்டைப் பையன் பெரியவா முன்னால வந்து நிற்கவும் ரொம்ப சரியாக இருந்தது.

நமஸ்காரம் பண்ணிட்டு எழுந்திருந்த பையனைப் பார்த்தார் மகாபெரியவா. "ஊர்ல அப்பா,அம்மா எல்லாம் க்ஷேமமா இருக்காளா? இந்தா இது உனக்குத்தான்...இதுல இருக்கிற பணத்தை அம்மாகிட்டே கொடுத்துடு. ஸ்ரீமடத்துல குடுத்ததா சொல்லு.."ஆசிர்வதித்து மூங்கில்தட்டை அவன் பக்கமா நகர்த்தினார்

அந்தப் பையனுக்கு எதுவும் புரியலை.மலங்க மலங்கப் பார்த்தான். அவனுக்கு மட்டுமில்லை..அங்கே இருந்த ஸ்ரீகார்யம் உட்பட யாருக்கும் எதுவும் புரியலை. பெரியவா எதுக்காக இந்தப் பையனுக்கு இப்படி ஒரு ஆசிர்வாதம் செய்யறார்? புதுத் துணிமணியாவது பரவாயில்லை.அதுல பணமும் குறிப்பிட்ட தொகையா வைக்கச் சொன்னாரே..அது எதுக்கு? எல்லாருமே புரியாமத்தான் விழிச்சுண்டு இருந்தா.

தயங்கித் தயங்கி அந்தப் புதுத்துணி,கனிகள்,புஷ்பம் எல்லாத்தையும் எடுத்துண்ட அந்தப் பையன்,பணம் இருந்த கவரை எடுத்துக்க ரொம்பவே தயங்கினான்

"தயங்காதே எடுத்துக்கோ..இது உங்க தாத்தாவுக்கு சேரவேண்டியது...அவர் இப்ப இல்லையோன்னோ,அதான் உன்கிட்ட குடுத்து உங்க அம்மாகிட்டே தரச்சொல்றேன்!" பெரியவா சொல்ல ஆச்சரியம் இன்னும் அதிகரிச்சுது.

ஸ்ரீகார்யம் உட்பட..எல்லோரும் திருதிருன்னு விழிக்கறதைப் பார்த்துட்டு மகாபெரியவாளே சொல்லத் தொடங்கினார்.

"என்ன யாருக்கும் எதுவும் புரியலையா? ரெண்டு மூணு வருஷத்துக்கு முன்னால ஸ்ரீமடத்துக்கு எதுத்தாப்புல ஒரு பலசரக்குகடை இருந்துதே ஞாபகம் இருக்கா? அந்தக் கடைக்காரரோட பேரன்தான் இவன்.

வட தேசத்துக்கு நான் யாத்திரை புறப்பண்டு இருக்கறச்சே, அந்தக் கடைக்காரர் என்னண்டை வந்தார். நமஸ்காரம் பண்ணினார். நான் அவர்கிட்டே எப்படி இருக்கேள்? வியாபாரம் எல்லாம் நன்னா நடக்கறதா?ன்னு கேட்டேன் ...

"வியாபாரம் முன்னே நடந்த அளவுக்கு இல்லை சுவாமி..ஏதோ ஓடிண்டு இருக்கு. மடத்தில் இருந்து கூட கொஞ்சம் பணம் வரவேண்டி நிலுவை இருக்கு. நீங்க வடதேசம் போறீங்க...திரும்பவர நாலஞ்சு மாசம் ஆகும்னாங்க..அதான் உங்ககிட்டே சொல்லலாம்னு தோணித்து" அப்படின்னார் அவர்.அப்போ மடம் ரொம்ப சிரம தசையில இருந்ததால் நானும் எதுவும் சொல்ல முடியலை. எவ்வளவு பாக்கின்னு மட்டும் கேட்டேன்.எண்ணூத்தி சொச்சம்னு சொன்னார்

வட தேசத்துல இருந்து திரும்பி வந்தப்போ, இங்கே கடையையே காணும். விசாரிச்சதுல கடைக்காரர் காலகதி அடைஞ்சுட்டதாகவும், அவரோட சொந்தக்காரா எல்லாரும் ஊரை மாத்திண்டு போயிட்டதாகவும் தெரிஞ்சுது..

கடைக்காரர் கடன் இருக்குன்னு சொன்னாரே, அதை எப்படி யார் மூலமா தர்றது? யார்கிட்டே தர்றதுன்னு யோசிச்சுண்டே இருந்தேன். இவ்வளவு நாள் கழிச்சு இப்போதான் இவன் மூலமா அதை திருப்பி செலுத்தறதுக்கு சந்தர்ப்பம் அமைஞ்சிருக்கு!. அவன் கடைக்காரரோட பொண்ணு வயத்துப் பேரன்"

மகாபெரியவா சொல்லிட்டு நிறுத்த அந்தப் பையனுக்கு ரொம்பவே ஆச்சரியம்! தான் எதுவுமே சொல்லாம, தன்னோட தாத்தாவை எப்படித் தெரிஞ்சுண்டார் பெரியவா? அந்த ஆச்சரியம் தீராமலே பெரியவாளை இன்னொரு தரம் நமஸ்காரம் செஞ்சுட்டு புறாப்பட்டான் அவன்.

மூணு நாலு வருஷம் முன்னால கடைக்காரர் சொன்னதை நினைவுல வைச்சுண்டு இருந்தது, அவரோட உறவுக்காரன் வந்ததும் அதை யாரும் சொல்லாமலே தெரிஞ்சுண்டது, கடைக்காரர் சொன்ன தொகைக்கு சரியான சதவீதத்துல வட்டி குடுத்து! இத்தனை நாள்ல வட்டியும் அசலுமா என்ன தொகை வருமோ அதை ரொம்பத் துல்லியமா கணக்குப் போட்டு, அந்தத் தொகையை கவர்ல வைச்சுத் தரச் சொன்னது,

இதெல்லாம் மகாபெரியவா சாட்சாத் அந்த மகேஸ்வரனோட ..அம்சம்கறதை சொல்லாமலே உணர்த்தக்கூடிய அற்புதங்கள் இல்லாம வேற என்ன?

Wednesday, 19 February 2020

காளிகாம்பாள் கோயிலுக்குப் போ.. (குழந்தையை தொலைத்த பெண்ணுக்கு திரும்பி கிடைத்த சம்பவம்)

 
காளிகாம்பாள் கோயிலுக்குப் போ..
(குழந்தையை தொலைத்த பெண்ணுக்கு திரும்பி கிடைத்த சம்பவம்)
(பெரியவா காளியா? காமாட்சியா?)
சொன்னவர்; ஸ்ரீமடம் பாலு.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.


பத்து வயதுப் பெண் குழந்தையுடன், ஸ்ரீமடம் அருகிலுள்ள பஸ் ஸ்டாப்பில் இறங்கினாள் ஓர் அம்மாள். பெண்ணின் கையைப் பிடித்துக் கொண்டு, சாலையைக் கடந்து எதிர்புறம் வந்தாள் "கூட்டம் இல்லாமல் இருக்கணுமே" ..பெரியவா தரிசனம் நிம்மதியாகக் கிடைக்கணுமே?' என்ற கவலை அரித்தது.


மடத்தின் வாசலுக்கு வந்ததும், ஏதோ பொறி தட்டியது. கையைப் பிடித்திருந்த பெண்ணைக் காணவில்லை. திக்கென்றது,தேடிப் பார்த்தாள், காணவில்லை. உள்ளே சென்று பெரியவாளிடம் முறையிட்டாள்.


பெரியவா சிறிது நேரம் கண்ணை மூடிக்கொண்டு, தியானம் செய்வதுபோல் மௌனமாக இருந்தார்கள்.


"காளிகாம்பாள் கொயிலுக்குப் போ...ஒரு சீட்டில் 'பெண் குழந்தையைக் காணோம்,கண்டு பிடித்துச் சேர்ப்பிக்கவும்' என்று எழுதி, ஒரு ரூபாய் காணிக்கையுடன் கோயில் உண்டியில் போட்டு விட்டு வா" என்றார்கள்


அம்மாள் பதற்றத்துடன் காளிகாம்பாள் கோயிலுக்குப் போனாள். காளி..காளி என்று மனதிற்குள் ஜபம்.


ஆச்சரியம்! கோவில் வாசலிலேயே அந்தப். பெண் குழந்தை தேம்பித் தேம்பி அழுத வண்ணம் நின்று கொண்டிருந்தது. சிலர் சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.


விவரம் கூறி, குழந்தையை அழைத்துக் கொண்டு பெரியவாளிடம் வந்தாள் அம்மையார். நெஞ்சுருக நமஸ்கரித்தாள்.


"சீட்டு எழுதிப் போட்டயோ?"


"போட்டேன். அங்கே மூலஸ்தானத்தில், பெரியவாதான் கண்ணில் பட்டார்கள். இங்கே காளி தான் என் கண்களுக்குப் படுகிறாள்.


பெரியவா, காளியா? காமாட்சியா?


சகலம்!